தவெக அமைச்சரவை விரிவாக்கம்.. அதிமுக விவகாரம்.. சென்னை வந்தடைந்த தமிழக ஆளுநர்..
இந்த சூழலில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆளுநர் மாளிகையில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில், தமிழக வெற்றிக் கழக அரசு குதிரைப் பேரத்தில் ஈடுபடுவதாகவும், 25 எம்.எல்.ஏக்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அளித்த ஆதரவு செல்லாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை, மே 16, 2026: தமிழக ஆளுநர் ஆர்.வி அர்லேகர் நேற்று சென்னை திரும்பினார். இன்று மட்டும் சென்னையில் தங்கியுள்ள அவர், இன்று இரவே மீண்டும் கேரளாவுக்கு புறப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கேரளாவில் வருகிற மே 18ஆம் தேதி புதிய முதலமைச்சராக வி.டி சதீசன் பதவியேற்க உள்ள நிலையில், அதில் பங்கேற்பதற்காக அவர் கேரளா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் சூழல் மற்றும் புதிய அரசின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஆளுநர் சென்னைக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழக அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகக்கூடும் என கூறப்படுகிறது.