தமிழ்நாடு: ஜூன் 28, 29 தேதிகளில் நடைபெறவிருந்த எஸ்.ஐ. தேர்வு ஒத்திவைப்பு…
TNUSRB SI Recruitment 2025: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) நடத்தவிருந்த உதவி ஆய்வாளர் (SI) தேர்வு 2025 ஜூன் மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் புதிய தீர்ப்பு காரணமாக சீனியாரிட்டி வழங்கும் முறையில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஜூன் 10: தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளர் (SI) தேர்வு 2025 ஜூன் 28, 29ஆம் தேதிகளில் நடைபெறவிருந்தது, ஆனால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1,299 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ள நிலையில், 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். பணியில் உள்ள காவலர்களுக்கு 20% ஒதுக்கீடு, பொதுமக்களுக்கு 80% ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இரு பிரிவுகளுக்கும் தனித்தனி தேர்வுகள் நடைபெற உள்ளன. உச்ச நீதிமன்றத்தின் புதிய தீர்ப்பால் சீனியாரிட்டி வழங்கும் முறையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக TNUSRB தெரிவித்துள்ளது.
உதவி ஆய்வாளர் தேர்வு தள்ளிவைப்பு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணம்!
தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளர் (SI) பணிக்கான எழுத்துத்தேர்வு, எதிர்வரும் 2025 ஜூன் 28 மற்றும் 29 தேதிகளில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், இந்த தேர்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) தெரிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வமாக கடந்த ஏப்ரலில் வெளியான அறிவிப்பு
அதிகாரப்பூர்வமாக கடந்த ஏப்ரலில் வெளியான அறிவிப்பின் படி, 909 ஆண்கள் மற்றும் 390 பெண்கள் என மொத்தம் 1,299 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதற்காக சுமார் 3 லட்சம் இளைஞர்கள் மற்றும் காவல் துறையில் உள்ளவர்கள் விண்ணப்பித்தனர். இதில், தற்போது பணியில் உள்ள இரண்டாம் மற்றும் முதல்நிலை காவலர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டு, மீதமுள்ள 80 சதவீதம் பொது தேர்வர்களுக்காக ஒதுக்கப்பட்டது.




இரு பிரிவுகளுக்கும் தனித்தனி தேர்வுகள் மற்றும் மதிப்பெண்கள் வழங்கப்படுவதால், தேர்விற்குப் பின்னர் வரும் பயிற்சி மதிப்பெண்களின் அடிப்படையில் பதவி உயர்வில் முன்னுரிமை (seniority) வழங்கப்படும். இதுவரை இந்த நடைமுறை தொடர்ந்துவருகிறது.
உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் தேர்வு ஒத்திவைப்பு
ஆனால் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், தேர்வின்போது பெறப்படும் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு சீனியாரிட்டி வழங்கப்படவேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனால், இரு தேர்வுகளும் ஒரே மாதிரியாக நடத்தப்பட வேண்டுமா என்ற குழப்பம் எழுந்துள்ளது. இதுகுறித்து தெளிவாக விளக்கம் தேவைப்படும் நிலையில், டிஜிபி அலுவலகம் உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கேட்டுள்ளது.
இத்துடன் தொடர்புடைய விவகாரங்கள் தெளிவாகும் வரை, எஸ்.ஐ தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. இதனால், தேர்வை எதிர்பார்த்திருக்கும் ஆயிரக்கணக்கான தேர்வர்கள் குழப்பத்திலும் ஆவலிலும் உள்ளனர். தேர்வு நடத்தும் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) என்பது காவல், தீயணைப்பு மற்றும் சிறைத் துறைகளில் பணியாற்ற தேவையான சீருடைத் தரப்பணியாளர்களை தேர்வு செய்வதற்காக 1991-ஆம் ஆண்டு நவம்பரில் தமிழக அரசு உருவாக்கிய நிறுவனம் ஆகும்.
இந்த வாரியம் மூலமாக, காவல் துறையில் துணை ஆய்வாளர் (SI), இரண்டாம் நிலை காவலர் (PC), தீயணைப்பு துறையில் ஸ்டேஷன் ஆபிசர் மற்றும் ஃபயர்மேன், சிறைத் துறையில் ஜெயில் வார்டர் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தேர்வுக்கான செயல்முறை ஆன்லைன் விண்ணப்பம், எழுத்துத் தேர்வு, உடற்கூறுத்திறன் மற்றும் சக்தி பரிசோதனை, சான்று சோதனை, பேட்டி மற்றும் மருத்துவ பரிசோதனை என பல்வேறு நிலைகளில் நடைபெறுகிறது.