சென்னையில் இரண்டு நாட்கள் மின்சார ரயில்கள் ரத்து.. எந்த எந்த வழித்தடங்களில்?
Chennai Train Cancellations for Two Days | சென்னையில் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு மின்சார ரயில்கள் தான் பிரதான போக்குவரத்து அம்சமாக உள்ளது. இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எந்த எந்த நாட்கள் எத்தனை ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சென்னை, ஜூன் 09 : சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்றும் (ஜூன் 09, 2025), ஜூன் 12, 2025 ஆகிய இரண்டு நாட்கள் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே (Southern Railway) அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் – கூடூர் வழித்தடத்தில் உள்ள கவரப்பேட்டை – கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் இடையே இன்றும், ஜூன் 12, 2025 அன்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள நிலையில், ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், இந்த இரண்டு நாட்களும் எந்த எந்த நேரத்தில் எத்தனை ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை பொதுமக்களின் பிரதான போக்குவரத்தாக உள்ள மின்சார ரயில்கள்
சென்னையின் பிரதான பொது போக்குவரத்துகளில் ஒன்றாக உள்ளது மின்சார ரயில்கள் தான். சென்னையை பொருத்தவரை, நாள்தோறும் மின்சார ரயில்கள் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். மிக விரைவாகவும், குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய முடியும் என்பதால் பெரும்பாலான மக்கள் ரயில் போக்குவரத்தை தேர்வு செய்கின்றனர். இவ்வாறு ஏராளமான பொதுமக்கள் ரயில் போக்குவரத்தை பயன்படுத்தும் நிலையில், இரண்டு நாட்களுக்கு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.




இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்படும் ரயில்கள் – தெற்கு ரயில்வே அறிவிப்பு
As part of ongoing engineering works, Line Block/Signal Block is permitted in #Chennai Central #Gudur section between #Kavaraipettai and #Gummidipundi Railway stations on 09th & 12th June 2025.
Passengers, kindly take note.#RailwayUpdate pic.twitter.com/QWN5bdFvcn
— DRM Chennai (@DrmChennai) June 7, 2025
சென்னை சென்ட்ரல் – கூடூர் வழித்தடத்தில் உள்ள கவரப்பேட்டை – கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் இடையே இன்றும், ஜூன் 12, 2025 அன்றும் காலை 11.20 மணி முதல் மாலை 3.20 மணின் வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக சில பின்வரும் பட்டியலில் உள்ள ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
எந்த எந்த ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன?
- சென்ட்ரலில் இருந்து காலை 10.30, 11.35 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள்.
- சென்ட்ரலில் இருந்து காலை 10.15, மதியம் 12.10, 1.05 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள்.
- கடற்கரையில் இருந்து காலை 9.40, மதியம் 12.40 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள்.
- சென்ட்ரலில் இருந்து இரவு 11.40 மணிக்கு ஆவடி செல்லும் ரயில்கள்.
- கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 1, 2.30 மாலை 3.15 ஆகிய நேரங்களில் சென்ட்ரல் செல்லும் ரயில்கள்.
- சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 1.15, மாலை 3.10 மற்றும் இரவு 9 மணிக்கு சென்ட்ரல் செல்லும் ரயில்கள்.
- சூலூர்பேட்டையில் இருந்து மாலை 3.50 மணிக்கு நெல்லூர் செல்லும் ரயிலும், மறுமார்க்கமாக நெல்லூரில் இருந்து 6.45 மணிக்கு சூலூர்பேட்டை வரும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
எனவே மேற்குறிப்பிட்ட நேரங்களில் பயணம் செய்யும் பொதுமக்கள் தங்களது பயண திட்டங்களை மாற்றி அமைத்துக்கொள்ளுமாறு கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.