AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தீய சக்தியும் – தீஞ்சு போன சக்தியும்.. திமுக அதிமுகவை கடுமையாக சாடிய முதல்வர் விஜய்..

ஊழல் இல்லாத, லஞ்சம் இல்லாத ஆட்சியை நான் கொடுப்பேன். ஒரே நாளில் அது நடக்காது. ஆனால் ஒரு நாள் அதை நடக்க வைப்பேன். எனக்கு இப்போது எந்த வேலையும் கிடையாது — உங்களுக்கு நல்லது செய்வதைத் தவிர என முதல்வர் விஜய் பேசியுள்ளார்.

தீய சக்தியும் – தீஞ்சு போன சக்தியும்.. திமுக அதிமுகவை கடுமையாக சாடிய முதல்வர் விஜய்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 01 Jun 2026 18:02 PM IST

திருச்சி, ஜூன் 1, 2026: திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “கடைசி ஒரு மாதமாக நடந்த சில விஷயங்களை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கட்டணமில்லா மின்சாரம் அறிவித்தோம். அதில் முதல் 100 யூனிட் இலவசம் என்பது திமுக அறிவித்தது கிடையாது. அது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தியது.

ஒரு மாத காலத்தில் என்ன செய்ய முடியுமோ அதை செய்தேன்:

மக்கள் பணத்தை, டாஸ்மாக்கில் இருந்து வந்த பணத்தை வைத்து ஊழல் பைல்களை மூட முயற்சித்தீர்கள். விவசாயிகளின் கடனை ஒரு மாத காலத்தில் என்னால் என்ன செய்ய முடியுமோ அதை நான் செய்தேன். நீங்கள் தான் எல்லா கேடுகளையும் பிளாக் செய்து விட்டீர்களே, அதை ஒழுங்குபடுத்த வேண்டாமா?

அதனால் மீண்டும் சொல்கிறேன்… இந்த விஜய் பொய் சொல்லி ஏமாற்றுவதற்காக அரசியலுக்கு வரவில்லை. உங்கள் உடன் கூடவே நிற்பதற்காக அரசியலுக்கு வந்திருக்கிறேன். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. கவலைப்பட வேண்டாம் விவசாய பெருமக்களே.

‘சட்டம் ஒழுங்கு சரியில்லை, இது சரியில்லை’ என மாறி மாறி கூறுகிறீர்கள். நான் உங்களைத்தான் கேட்கிறேன்… ‘மாடல் அரசு’ என சொல்கிறீர்களே, அதில் என்ன செய்துவிட்டு போயிருக்கிறீர்கள்?

ஒரு தெரு விடாமல் போதைப்பொருள் கொட்டிக்கிடக்கிறது. அதை ஆரம்ப ஸ்டேஜிலேயே கண்ட்ரோல் பண்ணியிருந்தீங்கன்னா, எத்தனை பெண் குழந்தைகளையும் பெண்களையும் இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்காது. எல்லாத்தையும் பண்ணிவிட்டு தற்போது பழியை தூக்கி என் மேல் போடுகிறார்கள்.

மக்களுக்கு நிம்மதியாக வாழ எல்லாவற்றையும் செய்வேன்:

நீங்கள் என்ன பழி நம்ம மேல் போட்டாலும், மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய அந்த செயலை கண்டிப்பாக இந்த விஜய் செய்து காட்டுவான். அதற்காக திறமையான காவல்துறையினரையும் காவல் அதிகாரிகளையும் நான் நியமித்துக் கொண்டேன். பெண்கள் பாதுகாப்புக்காக ‘சிங்கப்பெண் படை’ அடுத்த வாரம் தொடங்க இருக்கிறது.

தவறு செய்தவர்களுக்கான தண்டனை மிகவும் துரிதமாக கிடைக்கக்கூடிய வேலைகளையும் மேற்கொள்ள சொல்லியிருக்கிறோம். நீதிமன்றத்திலும் தவறு செய்தவர்கள் மீது கடுமையான தண்டனை வாங்கிக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த சொல்லியிருக்கிறோம்.

என்ன பழி நம்ம மீது போட்டாலும், உண்மையாகவும் உறுதியாகவும் மக்களுக்கு தேவையான எல்லா விஷயங்களையும் நான் செய்வேன்.

இப்படி எல்லாம் நம்ம சொல்றதுனால, ‘நமது ஆட்சியில் இல்லாத விஷயத்துக்கு ஏன் அவங்களுக்கு குறை சொல்றீங்க?’ அப்படின்னு கேட்பாங்க. வேரில் வெந்நீரை ஊத்திட்டு போனவங்களை வெளிச்சம் போட்டுக் காட்டாமல் வேற என்ன சொல்லுவாங்க? இதையெல்லாம் மக்கள் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டாமா? அதற்காகத்தான் இதையெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கேன்.

தீய சக்தியும் – தீஞ்சு போன சக்தியும்:

இந்த தீய சக்தியும், தீஞ்சு போன சக்தியும் — அதாவது திமுகவும் மற்ற சிலரும் — ஒன்றாக சேர்ந்து, திருட்டுத்தனமாக யாருக்கும் தெரியாமல் ஒரு ஓரமாக உட்கார்ந்து பேரம் பேசி, கூட்டுச் சேர்ந்து ஆட்சியை கொள்ளையடிக்க திட்டம் போட்டாங்க. அது ஏன் தெரியுமா? உங்களுடைய இந்த டிவிகே ஆட்சி அமைந்துவிட்டால், அவங்க பொழப்பே போயிடும். கொள்ளை அடிப்பது, லஞ்சம், ஊழல் எல்லாம் முடிந்துவிடும். அதுதான் காரணம்.

ஸ்டாலின் சார், இப்போது திமுக தீய சக்தி மட்டும் கிடையாது; மக்களை விட்டு தூரமாக போன ‘தூர சக்தியும்’ கூட. நீங்கள் எப்போது இந்த தீஞ்சு போன சக்தியோடு கூட்டுச் சேர்ந்து ஆட்சி அமைக்க நினைத்தீர்களோ, அப்போதே திமுக ‘தூரம் போன சக்தி’யாக மாறிவிட்டது. நீங்கள் எல்லாம் நம்மைப் பற்றி அவதூறு பேசலாமா சார்? இது நியாயமா?

தவெக பாகுபாடு இல்லாத ஆட்சியாக இருக்கும்:

இப்போதும் சொல்கிறேன்… தமிழக வெற்றிக்கழக ஆட்சி எந்த ஒரு பாகுபாடும் இல்லாத ஆட்சியாகத்தான் இருக்கும். அதில் எந்த மாற்றமும் கிடையாது. ஸ்டாலின் சார் மாதிரி ஊசலாட்டம் இருக்காது. மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமே கிடையாது. மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம். நதிநீர் உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம். சமூக நீதியையும் சமத்துவ நீதியையும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.

அதனால் திருச்சி கிழக்கு தொகுதி மக்களே, தமிழ்நாட்டில் இருக்கிற 234 தொகுதிகளும் நம்ம தொகுதிதான். அதில் எந்த கட்சி ஜெயித்திருந்தாலும் அது நம்ம மக்கள் தான். பெரம்பூராக இருக்கட்டும், திருச்சி கிழக்காக இருக்கட்டும் — எனக்கு இரண்டு கண்கள் மாதிரி. அதில் திருச்சி கிழக்கு என் செல்லப் பிள்ளை மாதிரி

இடைத்தேர்தலில் உங்கள் ஆதரவு வேண்டும்:

அதனால் வரப்போகும் இடைத்தேர்தலில், உங்க வீட்டில் இருக்கிற ஒருத்தரை, உங்களில் ஒருத்தரை வேட்பாளராக நிறுத்தப் போகிறோம். எப்படி இந்த விஜய்க்கு ஆதரவளித்தீர்களோ, அதேபோல் அந்த வேட்பாளரையும் ஜெயிக்க வைப்பீர்கள் என நம்புகிறேன்.

ஊழல் இல்லாத, லஞ்சம் இல்லாத ஆட்சியை நான் கொடுப்பேன். ஒரே நாளில் அது நடக்காது. ஆனால் ஒரு நாள் அதை நடக்க வைப்பேன். எனக்கு இப்போது எந்த வேலையும் கிடையாது — உங்களுக்கு நல்லது செய்வதைத் தவிர.

மீண்டும் என்னை ஜெயிக்க வைத்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி, வணக்கம்” என தனது உரையை முடித்துக் கொண்டார்.

Follow Us