Tamil Nadu Weather forecast: அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை வச்சு செய்யப்போகுது.. வானிலை மையம் கொடுத்த அலர்ட்!
Tamil Nadu Weather today: தமிழகத்தில் தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, அடுத்த சில நாட்களுக்குப் பல மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை, செப்டம்பர் 13: தமிழகத்தில் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக சுமார் 1.5 கிமீ உயரம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.
இதையும் படிக்க : “எங்கே சென்றது சிங்கப்பெண் படை?”.. ஒரே நாளில் அடுத்தடுத்த பாலியல் குற்றங்கள்.. வானதி சீனிவாசன் சரமாரி கேள்வி!
இன்று மழைக்கு வாய்ப்பு:
அந்தவகையில், இன்று (செப்.13) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
வரும் நாட்களில் மழை நிலவரம்:
தொடர்ந்து, செப்.14ம் தேதி மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, கோவை, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
அதனைத்தொடர்ந்து, செப்.15-ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழையும், மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், அரியலூர், பெரம்பலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களி லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
செப்.16ம் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், தேனி, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை மாற்றம்:
உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க இன்று முதல் 15ஆம் தேதி வரை மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
இதையும் படிக்க : தமிழகத்தில் தொடரும் மின்வெட்டுக்கு காரணம் என்ன? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
சென்னை வானிலை நிலவரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.