அடுத்த இரு நாட்களுக்கு வெப்பநிலை 2 – 3 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்பு
Tamil Nadu Weather Alert: தமிழ்நாட்டில் 2025 ஜூன் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் வெப்பநிலை இயல்பு நிலையை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் மாறுபாட்டால், சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு ஜூன் 03: தமிழகத்தில் (Tamilnadu Weather Aert) இன்றும் நாளையும் (2025 ஜூன் 3 மற்றும் 4) இயல்பைவிட வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாகப் பதிவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இருப்பினும், மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக மாநிலத்தின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது மற்றும் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் இதே வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது. என சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai Meteorological Department) தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேர வானிலை தொகுப்பு
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் வூட் பிரையர் எஸ்டேட் மற்றும் செருமுள்ளி ஆகிய பகுதிகளில் தலா 4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. வெப்பநிலை நிலவரத்தைப் பொறுத்தவரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2-3° செல்சியஸ் அதிகமாக இருந்தது. மதுரை விமான நிலையத்தில் 39.4° செல்சியஸ் ஆகவும், தர்மபுரி மற்றும் கரூர் பரமத்தியில் குறைந்தபட்ச வெப்பநிலை 23.0° செல்சியஸ் ஆகவும் பதிவாகியுள்ளது.




அடுத்த ஏழு தினங்களுக்கான முன்னறிவிப்பு
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூன் 3 மற்றும் 4 தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 2025 ஜூன் 5 முதல் 9 வரை, இதே பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலை முன்னறிவிப்பின்படி, 2025 ஜூன் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
வெப்பநிலை 2 – 3 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்பு
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) June 3, 2025
அசௌகரிய எச்சரிக்கை மற்றும் சென்னை வானிலை
அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் சூழ்நிலையில், தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் அசௌகரியமான காலநிலை நிலவலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான முக்கிய எச்சரிக்கை
கடலோரப் பகுதிகளுக்குச் செல்லும் மீனவர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். 2025 ஜூன் 3ஆம் தேதி தென்தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். 2025 ஜூன் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் இதே வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது.
அரபிக்கடல் பகுதிகளிலும் ஜூன் 3 முதல் 7 வரை மணிக்கு 45 முதல் 65 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.