Anna University Assault Case: இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல்.. எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர் ரகுபதி!
Gnanasekaran life Imprisonment: அண்ணா பல்கலைக்கழக பாலியல் தொல்லை வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 5 மாதங்களில் வழக்கு முடிந்தது என அரசு சாற்ற, எடப்பாடி பழனிசாமி 'யார் அந்த சார்?' என கேள்வி எழுப்பினார். சட்ட அமைச்சர் ரகுபதி, இது இழிவான அரசியல் என பதிலளித்தார்.

சென்னை, ஜூன் 2: 2024 டிசம்பரில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் (Anna University Case) அத்துமீறி நுழைந்து 19 வயது மாணவிக்கு எதிராக பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரனுக்கு சென்னை மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. அதன்படி, ஞானசேகரன் குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் சிறையில் ஒருக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இருப்பினும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palaniswami) விசாரணையின்போது மற்றொரு நபரான யார் அந்த சார் என்ற நபருக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினார். மேலும், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்போது இதுப்போன்ற கேள்விகளுக்கான பதில்கள் வெளிப்படும் என்றும் தெரிவித்தார். இதற்கு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி (Minister Raghupathi) தேவையான விளக்கத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் கொடுத்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி முன்வைத்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதியின் எக்ஸ் தள பதிவின் முக்கிய கருத்துகள்..
- அண்ணா பல்கலைக்கழக வழக்கில் இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்தான்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு எடுத்த நடவடிக்கையின் கீழ் 5 மாதங்களில் அண்ணா பல்கலைக்கழகப் பாலியல் வழக்கில் வழக்கு விசாரணை முடிந்தது. அண்ணா பல்கலைக்கழகப் பாலியல் வழக்கில் நீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைத்துள்ளது.
- அண்ணா பல்கலைக்கழக வழக்கில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்படும் என்று சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அதேபோல். 60 நாட்களில் குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
- முன்னதாக, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இழுத்தடித்த பழனிசாமியால்தான் அந்த வழக்கில் நீதிக் கிடைக்க சுமார் 6 ஆண்டுகள் ஆனது. ஆனால், அண்ணா பல்கலைக்கழக வழக்கில் பாதிக்கபட்ட பெண்ணுக்கு 5 மாதங்களில் நீதிக் கிடைக்கச் செய்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அமைச்சர் ரகுபதியின் எக்ஸ் தள பதிவு:
இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிசாமி சார்தான்!
திராவிட மாடல் அரசு எடுத்த உறுதியான நடவடிகைகளால் 5 மாதங்களில் வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு அண்ணா பல்கலைக்கழகப் பாலியல் வழக்கில் நீதிமன்றத்தில் தீர்ப்பு பெறப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகப் பாலியல்…
— எஸ்.ரகுபதி (@regupathymla) June 2, 2025




- அண்ணா பல்கலைக்கழக வழக்கில் உண்மையான குற்றவாளி ஞானசேகரன் தான் என நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. தமிழ்நாட்டு மாணவிகளை அச்சுறுத்தி அவர்களைக் கல்விநிலையங்களுக்குச் செல்ல விடாமல் அச்சுறுத்த வேண்டும் எனும் அற்ப புத்தியோடு ‘யார் அந்தச் சார்?’ என அருவருப்பு அரசியல் செய்த பழனிசாமியின் இழிவான அரசியல் அம்பலமாகியுள்ளது.
- சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிக்காட்டுதலில் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வு குழுவும் தனது அறிக்கையிலும் ஞானசேகரன் யாருடனும் பேசவில்லை அவனின் செல்போன் ‘flight Mode’ இல் தான் இருந்ததும், அவன் யாருடனும் பேசவில்லை என்பதும் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தியது.
- இல்லாத சார்களை புதிதாக தயாரித்து இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிசாமி சார்தான். இது போன்ற பொய் புரளிகளை வைத்து பித்தலாட்ட அரசியல் செய்வதையே முழுநேர பணியாக செய்து கொண்டிருக்கும் பழனிசாமி.
- தமிழ்நாட்டில் பெண்களின் உரிமைகளை உயர்த்தி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் நுனியளவு சமரசத்திற்கு இடம் தராமல் ஆட்சி செய்யும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பெண்களுக்குத் துன்பம் விளைவிக்கும் எந்தக் குற்றவாளியும் தப்ப முடியாது என்பதற்கு அண்ணா பல்கலைக்கழக வழக்கின் தீர்ப்பே சாட்சி!