திண்டுக்கல்: காதலை மறுத்ததால் சிறுமியை கொலை செய்ய முயன்ற காதலன்…
Murder Attempt After Rejecting Lover: தமிழகத்தில் காதலை நிராகரித்ததால் பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்திய சம்பவத்தில், 16 வயது சிறுமியை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல், கரூர், திருப்போரூர் போன்ற பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

தமிழ்நாடு ஜூன் 24: தமிழகத்தில் (Tamilnadu Crime) காதலை நிராகரித்த சிறுமிகள் மீது தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, காதலை நிராகரித்த 16 வயது சிறுமியை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற வழக்கில் 19 வயது இளைஞர் பேட்ரிக் சிலுவைமுத்து கைது செய்யப்பட்டுள்ளார். கரூரில் (Karur) 17 வயது சிறுமியை பிளேடால் தாக்க முயற்சித்த 17 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். திருப்போரூரில் 32 வயது இளைஞர் தனது காதலியிடம் கத்தியால் தாக்க முயன்றார். திருவள்ளூரில் முன்னாள் காதலன் 24 வயது பெண்ணை கழுத்தில் குத்தினார். அனைத்து சம்பவங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறான சம்பவங்கள் விழிப்புணர்வு மற்றும் மனநல ஆலோசனையின் அவசியத்தை வலியுறுத்துகின்றன.
காதலை நிராகரித்த 16 வயது சிறுமி
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, காதலை நிராகரித்த 16 வயது சிறுமியை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற வழக்கில் 19 வயது இளைஞர் பேட்ரிக் சிலுவைமுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல்லைச் சேர்ந்த சிறுமி மற்றும் ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்த பேட்ரிக் சிலுவைமுத்து இருவரும் முன்னதாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அவர் பேட்ரிக்குடன் பேசுவதை நிறுத்தியுள்ளார்.
பிளேடால் சிறுமியின் கழுத்தில் தாக்கிய பேட்ரிக்
இதனால் கோபமடைந்த பேட்ரிக், சிறுமியின் வீட்டுக்குச் சென்று மீண்டும் காதலை வற்புறுத்தினார். ஆனால் சிறுமி மறுத்ததையடுத்து, ஆத்திரமடைந்த பேட்ரிக், தன் கையில் வைத்திருந்த பிளேடால் சிறுமியின் கழுத்தில் காயம் விளைவித்தார்.




புகாரின் பேரில் பேட்ரிக் சிலுவைமுத்துவை கைது
இந்த தாக்குதலால் படுகாயமடைந்த சிறுமி அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். புகாரின் பேரில் பேட்ரிக் சிலுவைமுத்துவை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலை மறுத்ததால் சிறுமிகள் மீது தாக்குதல்
செப்டம்பர் 2024-ல் சென்னை அருகே திருப்போரூரில், காதல் தகராறு காரணமாக 32 வயது இளைஞர், தனது காதலியிடம் கத்தியால் தாக்க முயன்றார். போலீசார் உடனடியாக அவரை கைது செய்தனர். திருவள்ளூரில் இடம்பெற்ற மற்றொரு சம்பவத்தில், 24 வயது பெண்ணை, அவரது முன்னாள் காதலன் கழுத்தில் குத்தி படுகாயப்படுத்தினார். இவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த சம்பவங்கள், காதல் நிராகரிப்பை தாங்கிக்கொள்ள முடியாத மனநிலையிலும், கோபத்தின் அடிப்படையிலும் சில இளைஞர்கள் எவ்வளவு கொடூரமாக நடந்து கொள்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. சமூகத்தில் இத்தகைய மனநிலை மாற்றத்திற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்குவது அவசியமாகியுள்ளது.
பெண்கள் பாதுகாப்புக்காக பல்வேறு நிலைகளில் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது.