சிலிண்டர் தட்டுப்பாடு… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
Tamil Nadu Cylinder Shortage: தமிழகத்தில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில், முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, அதற்கான உத்தரவை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான போரில், இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதே போல, தமிழகத்திலும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் இன்று சனிக்கிழமை ( மார்ச் 14) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்பட்டதுடன், அதற்கான உத்தரவுகளை முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதில்,
மேலும் படிக்க: வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் நீரிணையை கடந்த இந்திய கப்பல்கள்.. பிரதமரின் தலையீட்டால் பலன்..




- கிளவுட் கிச்சன், டீ கடைகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட உணவு உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்கள் சிலிண்டர்களுக்கு பதிலாக மின்சார அடுப்புகளை பயன்படுத்தும் போது தேவைப்படும் கூடுதல் மின்சாரத்துக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.2 மானியம் வழங்கப்படும். மத்திய அரசின் வணிக எரிவாயு பயன்பாட்டு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் வரை இந்த மானியம் வழங்கப்படும்.
- குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் மின் உபகரணங்கள் மற்றும் மென் சூடேற்றிகள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் மானியத்துடன் கடன் வழங்கப்படும்.
- தமிழக மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 25 சதவீதம் ரூ.2 லட்சம் மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கவும், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 35 சதவீதம் அதிகபட்சமாக ரூ. 1 கோடி வரை மானியத்துடன் கடன் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- தமிழகம் முழுவதும் 9,300 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக நாள் ஒன்றுக்கு 55 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு கையாளப்பட்டு வருகிறது. தற்போது சிலிண்டர் தட்டுப்பாட்டினால் ஏற்பட்டு வரும் இடர்பாட்டின் காரணமாக மீதமாகும் பாலை அதன் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஆவின் பால் கூட்டுறவு சங்கங்களில் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- சிலிண்டர் பற்றாக்குறையால் உணவகங்கள் மூடப்படும் நிலையில், விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறி விற்பனையும் பாதிக்கப்படலாம். எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் தாங்கள் விளைவித்த காய்கறிகள் மற்றும் பழங்களை உழவர் சந்தைகளில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் விற்பனை செய்யலாம்.
- மேலும், மாநிலம் முழுவதும் வணிக நிறுவனங்களுக்கு முறையான சிலிண்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு கண்காணிப்பதற்கு தலைமைச் செயலாளர் கண்காணிப்பில் அரசு உயர் அலுவலர்கள் கொண்ட குழு செயல்படவும், மாவட்ட அளவில் எண்ணெய் விநியோக நிறுவனங்களின் பொறுப்பு அலுவலர்கள் அடங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான குழு கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சிலிண்டர் பதுக்கி வைத்து விற்பனை? திருப்பூரில் தனியார் கேஸ் நிறுவனத்துக்கு “சீல்”