Tamil Nadu Chief Minister M.K. Stalin: நகைக் கடன் விதிகளை தளர்த்த RBIக்கு நிதியமைச்சகம் பரிந்துரை.. முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு!
RBI Gold Loan Rules Relaxed: இந்திய ரிசர்வ் வங்கி 2025 ஏப்ரலில் வெளியிட்ட தங்கக் கடன் வழிகாட்டுதல்களை மறு ஆய்வு செய்து, ரூ.2 லட்சம் வரை கடன் பெறுவோருக்கு விலக்கு அளிக்க நிதி அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். சிறு கடன் பெறுவோர், குறிப்பாக விவசாயிகள் மற்றும் தினசரி கூலித் தொழிலாளர்கள் பயனடைவார்கள். நகைக் கடன் விதிகளில் தளர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை, மே 30: இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) கடந்த 2025 ஏப்ரல் மாதம் தங்கக் கடன் தொடர்பான சில திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டது. இதையடுத்து, நிதி அமைச்சகம் ரிசர்வ் வங்கிக்கு சிறு கடன் வாங்குபவர்களுக்கு இந்த விதிகளிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. தங்க கடன்கள் தொடர்பான விதிகளை மறு ஆய்வு செய்த பிறகு, ரூ. 2 லட்சம் வரை கடன் வாங்கும் சிறு கடன் வாங்குபவர்களை அவற்றிலிருந்து விலக்கு வேண்டும் என்று மத்திய வங்கிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் (Ministry of Finance) இன்று அதாவது 2025 மே 30ம் தேதி தெரிவித்திருந்தது. இந்தநிலையில், நகைக் கடன் விதிகளை தளர்த்த இந்திய ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதியமைச்சகம் பரிந்துரை செய்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu CM MK Stalin) வரவேற்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு:
இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “ இந்திய ரிசர்வ் வங்கியின் தங்கக் கடன்கள் தொடர்பான வரைவு வழிகாட்டுதல்கள் தொடர்பாக மத்திய நிதியமைச்சருக்கு நான் எழுதிய கடிதத்தில் எழுப்பிய விவரங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் பதிலளித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.




விவசாயிகள் மற்றும் தினசரி வருமானம் ஈட்டுபவர்கள் போன்ற சிறிய கடன் வாங்குபவர்களின் நலன்களைப் பாதுகாப்பதும், சரியான நேரத்தில் மற்றும் அணுகக்கூடிய கடன் கிடைப்பதை உறுதி செய்வதும் எனது நிலையான கோரிக்கையாக இருந்து வருகிறது.
இந்தப் பிரச்சினையில் கொடுக்கப்பட்ட நேர்மறையான பரிசீலனையைப் பாராட்டுகையில், ஏழைகள் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் இத்தகைய கொள்கைகள் மாநிலங்களுடன் முன்கூட்டியே கலந்தாலோசித்த பின்னரே எட்டப்பட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.” என தெரிவித்திருந்தார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் சமூக ஊடக பதிவு:
Glad to note that @FinMinIndia has responded to the concerns raised by me in my letter to the Hon’ble Union Finance Minister regarding @RBI’s draft guidelines on gold loans.
Protecting the interests of small borrowers, especially those seeking loans below Rs. 2 lakh such as… https://t.co/fq3HjFhqsa
— M.K.Stalin (@mkstalin) May 30, 2025
நிதி அமைச்சகம் பரிந்துரை:
வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு இடையே ஒரு சமநிலையை உருவாக்கவும், சமீபத்திய மேற்பார்வை மதிப்பாய்வுகளில் காணப்பட்ட கடன் நடைமுறைகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும், தங்கத்திற்கு ஈடாக கடன் வழங்குவதற்கான வரைவு வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2025 ஏப்ரல் மாதம் வெளியிட்டது. இதையடுத்து, மத்திய நிதியமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில், “வரைவு வழிகாட்டுதல்கள் குறித்து பெறப்பட்ட கருத்துக்களை ரிசர்வ் வங்கி மதிப்பாய்வு செய்து வருகிறது. பல்வேறு பங்குதாரர்களால் எழுப்பப்பட்ட கவலைகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்கள், ரிசர்வ் வங்கியால் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு, அது குறித்த வழிமுறைகளை இறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்திருந்தது.