ராம்குமார் மரண வழக்கு.. 10 ஆண்டு கால சட்டப் போராட்டம் நிறைவு.. உயர்நீதிமன்றம் கூறியது என்ன?
Swathi murder case: மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை அறிக்கை மற்றும் சென்னை மாநகரக் காவல் ஆணையரின் அறிக்கையின் அடிப்படையில், ராம்குமார் தற்கொலை செய்துகொண்டது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2020ஆம் ஆண்டு இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
தமிழகத்தையே உலுக்கிய மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில், முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட ராம்குமாரின் சிறை மரணம் தொடர்பான மேல்முறையீட்டு மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக நீடித்து வந்த ஒரு சர்ச்சைக்குரிய சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் 2016-ஆம் ஆண்டு மென்பொறியாளர் சுவாதி கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தற்போது அந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் பின்னணி மற்றும் நீதிமன்ற உத்தரவு குறித்த விரிவான விவரங்களை இக்கட்டுரையில் காணலாம்.
இதையும் படிக்க: எதிர்க்கட்சி வாக்குகள் சிதறினால் என்னவாகும்?.. தமிழக அரசியல் வரலாறு சொல்லும் இரு முக்கியப் பாடங்கள்..
வழக்கின் பின்னணி:
கடந்த ஜூன் 24, 2016 அன்று சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி மர்ம நபராகக் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
ராம்குமார் மரணம் மற்றும் சர்ச்சை:
சிறையில் இருந்த ராம்குமார், மின்சாரக் கம்பியைக் கடித்துத் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ராம்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது தந்தை பரமசிவம் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது.
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு:
மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை அறிக்கை மற்றும் சென்னை மாநகரக் காவல் ஆணையரின் அறிக்கையின் அடிப்படையில், ராம்குமார் தற்கொலை செய்துகொண்டது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ராம்குமாரின் தந்தை பரமசிவம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உரிய விசாரணை நடத்தாமல் வழக்கு முடிக்கப்பட்டதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிக்க: தமிழகத் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘பெண் சக்தி’: மௌனப் புரட்சி செய்யுமா பெண் வாக்குகள்?
விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை:
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு அறிக்கை மற்றும் காவல் ஆணையரின் அறிக்கைகளை ஆய்வு செய்தனர். ராம்குமார் தற்கொலை செய்துகொண்டது அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு, காவல் ஆணையரின் அறிக்கை ஆகியவற்றை ஆய்வு செய்ததில் எவ்வித முரண்பாடுகளும் கண்டறியப்படவில்லை. பலகட்ட விசாரணைகள் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், தற்போது புதிதாக விசாரணையைத் தொடங்க எந்தவொரு வலுவான ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை. இதனால், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறி, வழக்கை முழுமையாக முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.