AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எதிர்க்கட்சி வாக்குகள் சிதறினால் என்னவாகும்?.. தமிழக அரசியல் வரலாறு சொல்லும் இரு முக்கியப் பாடங்கள்..

Tamilnadu Assembly Election: 232 தொகுதிகளில் நடைபெற்ற இந்தத் தேர்தலில், திமுக தனது கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் களம் இறங்கியது. எதிர்க்கட்சிகள் பலமாகப் பிரிந்து நின்றதால், திமுக 150 இடங்களைப் பிடித்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சி அமைத்தது.

எதிர்க்கட்சி வாக்குகள் சிதறினால் என்னவாகும்?.. தமிழக அரசியல் வரலாறு சொல்லும் இரு முக்கியப் பாடங்கள்..
முதல்வர் ஸ்டாலின், விஜய், எடப்பாடி பழனிசாமி
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 24 Apr 2026 13:30 PM IST

Tamilnadu Polls: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில், யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்து எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தமிழக அரசியலில் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறும்போது அது தேர்தல் முடிவுகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. இதற்குச் சான்றாக, தமிழக அரசியல் வரலாற்றில் மைல்கல்லாக அமைந்த 1971 மற்றும் 1989 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களை விரிவான வரலாற்று உதாரணங்களாகக் காணலாம்.

இதையும் படிக்க: தமிழகத் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘பெண் சக்தி’: மௌனப் புரட்சி செய்யுமா பெண் வாக்குகள்?

காங்கிரஸ் பிளவும், திமுகவின் இமாலய வெற்றியும்:

1971-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல், தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அப்போது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, பிரதமர் இந்திரா காந்தி மற்றும் பெருந்தலைவர் காமராஜர் தலைமையில் இரண்டாகப் பிளவுபட்டிருந்தது. இந்திரா காந்தி தலைமையிலான ‘இந்திரா காங்கிரஸ்’, அப்போது ஆட்சியில் இருந்த திமுகவுடன் கூட்டணி அமைத்தது. மறுபுறம், காமராஜர் தலைமையிலான ‘ஸ்தாபன காங்கிரஸ்’ மற்றும் ராஜாஜியின் ‘சுதந்திரா கட்சி’ ஆகியவை இணைந்து பலமான எதிர்க்கட்சியாகத் தேர்தலைச் சந்தித்தன.

முந்தைய தேர்தல்களில் காங்கிரஸை ஆதரித்து வந்த தந்தை பெரியார், இந்தத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் தீவிரப் பரப்புரை செய்தார். சுமார் 72.10% வாக்குகள் பதிவான இந்தத் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பிளவால் திமுக வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது. 203 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, 184 இடங்களைக் கைப்பற்றி அசுர பலத்துடன் ஆட்சி அமைத்தது. அந்தத் தேர்தலில் திமுக பெற்ற 48.58% வாக்குகள் என்பது, தமிழகத் தேர்தல் வரலாற்றில் ஒரு கட்சி பெற்ற அதிகபட்ச வாக்கு விழுக்காடாகவும், அதிக இடங்களாகவும் இன்றுவரை நீடிக்கிறது.

அதிமுக பிளவும் திமுகவின் மீள்வருகையும்:

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு 1989-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல், வாக்குச் சிதறல் ஒரு கட்சிக்கு எப்படிப் பலன் தரும் என்பதற்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. 1987-ல் எம்.ஜி.ஆர். காலமானதைத் தொடர்ந்து அதிமுக ‘ஜானகி அணி’ மற்றும் ‘ஜெயலலிதா அணி’ என இரண்டாக உடைந்தது. ஜெயலலிதா தலைமையிலான அணி ‘சேவல்’ சின்னத்திலும், ஜானகி தலைமையிலான அணி ‘இரட்டைப் புறா’ சின்னத்திலும் களம் கண்டன. இதில் ஜெயலலிதா அணியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், ஜானகி அணியைச் சிவாஜி கணேசனின் ‘தமிழக முன்னேற்ற முன்னணி’யும் ஆதரித்தன. இந்த இரு அணிகள் தவிர, காங்கிரஸ் கட்சி தனித்து ஒரு அணியாகப் போட்டியிட்டது. இதனால் எதிர்க்கட்சி வாக்குகள் மூன்று பக்கமாகப் பிரிந்தன.

திமுக வகுத்த வியூகம்:

232 தொகுதிகளில் நடைபெற்ற இந்தத் தேர்தலில், திமுக தனது கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் களம் இறங்கியது. எதிர்க்கட்சிகள் பலமாகப் பிரிந்து நின்றதால், திமுக 150 இடங்களைப் பிடித்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சி அமைத்தது. இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், திமுக பெற்ற வாக்குகள் வெறும் 33.2% மட்டுமே. ஆனால், அதிமுகவின் இரு அணிகளும் காங்கிரஸும் தனித்தனியாகப் பிரிந்து நின்றதால், குறைவான வாக்கு சதவீதத்தைப் பெற்றிருந்தாலும் திமுகவால் அதிக இடங்களை வெல்ல முடிந்தது. அந்தத் தேர்தலில் ஜெயலலிதா அணி 27 இடங்களையும், காங்கிரஸ் 26 இடங்களையும் வென்றன. ஜானகி அணி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.

இதையும் படிக்க: தமிழகத் தேர்தலில் அரங்கேறிய சுவாரசியங்கள்.. டிராக்டரில் வந்த 80 பேர் குடும்பம் முதல் வரவேற்பு அளித்த ரோபோக்கள் வரை..

அரசியல் படிப்பினை சொல்வது என்ன?:

இந்த இரு வரலாற்றுத் தரவுகளும் ஒரு முக்கியமான உண்மையை உரக்கச் சொல்கின்றன. எதிர்க்கட்சிகள் கொள்கை ரீதியாகவோ அல்லது தலைமைப் போட்டியாலோ பிரிந்து நின்று தேர்தலைச் சந்திக்கும்போது, அது ஆளுங்கட்சிக்குக் கூடுதல் பலத்தைத் தருகிறது. 1971-ல் காங்கிரஸ் பிளவு திமுகவுக்குப் பெரும்பான்மையைத் தந்தது என்றால், 1989-ல் அதிமுக பிளவு திமுகவை மீண்டும் அரியணையில் ஏற்றியது. தற்போதைய அரசியல் சூழலிலும், இந்த வரலாற்றுப் பாடங்கள் மிகவும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன.

Follow Us