4 நாட்கள் தொடர் விடுமுறை – வெளியூர் செல்லும் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் – வெளியான அறிவிப்பு
Special Bus Services : தமிழ்நாட்டில் யுகாதி மற்றும் ரம்ஜான் என 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்படும் நிலையில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் பயணிக்க ஏதுவாக சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
சென்னை, மார்ச் 18 : சென்னை போன்ற பெரு நகரங்களில் வேலை மற்றும் படிப்புக்காக தங்கியிருப்பவர்கள் வார இறுதிகளில் தொடர் விடுமுறை விடப்பட்டால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதுபோன்ற நேரங்களில் அதிக அளவில் மக்கள் செல்வதால் பேருந்துகள் மற்றும் ரயில்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். இதனால் மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த பிரச்னையை சரி செய்ய தமிழ்நாட்டில் சிறப்பு பேருந்துகள் விடுவது வழக்கம். அந்த வகையில் தமிழ்நாட்டில் யுகாதி மற்றும் ரம்ஜான் என 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். அந்த வகையில் தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
யுகாதி, ரம்ஜானை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு
யுகாதி மற்றும் ரம்ஜானை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மார்ச் 18, 2026 இன்றும், மார்ச் 19, 2026 நாளை தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும் மார்ச் 20, 2026 வெள்ளிக்கிழமை, மார்ச் 21, 2026 சனிக்கிழமை ரம்ஜான் மற்றும் மார்ச் 22, 2026 அன்று ஞாயிற்றுக்கிழமை என தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனையடுத்து மார்ச் 18, 2026 மற்றும் மார்ச் 19, 2026 ஆகிய 2 நாட்கள் மக்கள் அதிக அளவில் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய நகரங்களுக்கு மார்ச் 18, 2026 இன்று 450 சிறப்பு பேருந்துகளும், மார்ச் 19, 2026 வியாழக்கிழமை 345 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கன்னி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு மார்ச் 18, 2026 அன்று 100 பேருந்துகளும், மார்ச் 19, 2026 அன்று வியாழக்கிழமை 90 பேருந்துகளும் இயக்க திட்டமிட்டுள்ளது. மேலும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 2000 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஊர் திரும்பும் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள்
மேலும் மாதவரத்தில் இருந்து மார்ச் 18, 2026 மற்றும் மார்ச் 19, 2026 ஆகிய 2 நாட்களும் 24 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 22, 2026 அன்று ஞாயிற்றுக்கிழமை தங்களது சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரூரு திரும்பும் பயணிகளின் வசதிக்காக 565 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.