ரத்தான மின்சார ரயில்கள்.. தாம்பரம் டூ கடற்கரை வரை ரயில் பயணிகளுக்கு இலவச பேருந்து சேவை.. முழு விவரம்..
பிப்ரவரி 28, 2026 (சனிக்கிழமை) முதல், தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே உச்ச நேரங்களில் 20 சுற்றுப் பயணங்களாக (trips) கூடுதல் பேருந்துகள் இலவசமாக இயக்கப்படுகின்றன. செல்லுபடியாகும் ரயில் டிக்கெட் அல்லது சீசன் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் இப்பேருந்துகளை இலவசமாக பயன்படுத்தலாம்.
சென்னை, பிப்ரவரி 26, 2026: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகளை முன்னிட்டு, நடைமேடைகள் 10 மற்றும் 11 தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக மின்சார ரயில் சேவைகளில் கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதாவது, சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த இன்னல்களை சற்றே சமாளிக்கும் வகையில், சென்னை தாம்பரத்திலிருந்து கடற்கரை வரை இரு மார்க்கங்களிலும் சிறப்பு பேருந்துகள் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துடன் இணைந்து இந்த சிறப்பு பேருந்து சேவைகள் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்து சேவை:
பிப்ரவரி 28, 2026 (சனிக்கிழமை) முதல், தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே உச்ச நேரங்களில் 20 சுற்றுப் பயணங்களாக (trips) கூடுதல் பேருந்துகள் இலவசமாக இயக்கப்படுகின்றன. செல்லுபடியாகும் ரயில் டிக்கெட் அல்லது சீசன் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் இப்பேருந்துகளை இலவசமாக பயன்படுத்தலாம்.
-
காலை உச்ச நேரம் (06.40 – 09.40 மணி): தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை 7 நிமிட இடைவெளியில் 20 பேருந்துகள் இயக்கப்படும்.
-
மாலை உச்ச நேரம் (17.00 – 20.00 மணி): சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை 7 நிமிட இடைவெளியில் 20 பேருந்துகள் இயக்கப்படும்.
இந்த பேருந்துகள் தாம்பரம், சானிடோரியம், குரோம்பேட்டை, பல்லாவரம், திருசுலம், கிண்டி, எழிலகம், செயலகம் மற்றும் பாரீஸ் கார்னர் உள்ளிட்ட MTC பேருந்து நிறுத்தங்களில் நின்று செல்லும். மேலும், உச்ச நேர நெரிசலை சமாளிக்க MTC மற்றும் CMRL நிறுவனங்களும் கூடுதல் சேவைகளை இயக்குமாறு தெற்கு ரயில்வே கோரிக்கை விடுத்துள்ளது.
கூடுதல் EMU ரயில் சேவைகள்:
காலை மற்றும் மாலை உச்ச நேரங்களில், தற்போதைய சேவைகளுக்கு மேலாக 15 பெட்டிகள் கொண்ட 5 கூடுதல் EMU ரயில்கள் விரைவு பாதையில் இயக்கப்படும்.
-
தாம்பரம் – சென்னை கடற்கரை (காலை)
-
சென்னை கடற்கரை – தாம்பரம் (மாலை)
இந்த ரயில்கள் தாம்பரம், மாம்பலம், கிண்டி, சென்னை எழும்பூர் மற்றும் கடற்கரை ஆகிய முக்கிய நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும். விரைவு பாதையில் இயக்கப்படுவதால், வழக்கமாக 75 நிமிடங்கள் ஆகும் பயண நேரம் 60 நிமிடங்களாக குறைக்கப்படும்.
MRTS புதிய இணைப்பு:
பயணிகள் மாற்று வழியில் சென்னை கடற்கரை / சென்னை பார்க் பகுதிகளை அடைய வசதியாக, செயின்ட் தோமஸ் மவுண்ட் – வேளச்சேரி MRTS (Phase-II) புதிய பாதை விரைவாக நிறைவு செய்யப்பட்டு, 2026 மார்ச் 10ஆம் தேதி முதல் இயக்கத்தில் சேர்க்கப்படும். இந்த புதிய இணைப்பு, தாம்பரம் – சென்னை கடற்கரை இடையேயான உச்ச நேர சேவைகளை மேலும் மேம்படுத்தும்.
மேலும் படிக்க: தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு.. அதிகாலையில் நிலவும் பனிமூட்டம்..
விரைவு ரயில்களில் மாற்றங்கள்:
பீக் நேரங்களில் விரைவு பாதையில் EMU ரயில்களை பெற வசதியாக,
-
சோழன் எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 22675) சென்னை எழும்பூரில் இருந்து காலை 10.15 மணிக்கு புறப்படும் வகையில், 28.02.2026 முதல் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
-
நெல்லை எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 12632) 01.03.2026 முதல் தாம்பரத்தில் முடிவடையும்.
-
பொதிகை எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 12661) 02.03.2026 முதல் சென்னை எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
இந்த முன்கூட்டிய நடவடிக்கைகளின் மூலம், மார்ச் 2, 2026க்குள் தாம்பரம் – கடற்கரை இடையேயான உச்ச நேரப் பயணிகளின் 90% தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்றும், மார்ச் 10, 2026க்குள் 100% தேவையும் பூர்த்தி செய்யப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.