AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பொங்கலை முன்னிட்டு கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு – எந்தெந்த ஊர்களுக்கு? எப்போது?

Pongal Special Trains Announced: பொங்கலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இதனால் வழக்கத்தைக் காட்டிலும் ரயில்களில் கூட்டம் அலை மோதும் என்பதால், தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

பொங்கலை முன்னிட்டு கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு – எந்தெந்த ஊர்களுக்கு? எப்போது?
சிறப்பு ரயில்கள்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 07 Jan 2026 20:38 PM IST

சென்னை, ஜனவரி 7 : பொங்கல் (Pongal) பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ளது. இந்த நிலையில் தொடர் விடுமுறையை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் சுற்றுலா தலங்களுக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இதனால் ரயில்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, பயணிகள் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் தெற்கு ரயில்வே கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

பொங்கலை முன்னிட்டு கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

அதன்படி, திருநெல்வேலி – தாம்பரம் சிறப்பு ரயில் (06058) ஜனவரி 13, 2026 மற்றும் ஜனவரி 20, 2026 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.45 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். இதன் மறுமார்க்கமாக, தாம்பரம் – திருநெல்வேலி சிறப்பு ரயில் (06057) அதே நாட்களில் பிற்பகல் 3 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 2 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.

மேலும், திருநெல்வேலி – செங்கல்பட்டு சிறப்பு ரயில் (06154) ஜனவரி 14, 2026 அன்று அதிகாலை 3.45 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மதியம் 1.15 மணிக்கு செங்கல்பட்டை அடையும். மறுமார்க்கமாக இந்த ரயில் (06153) அதே நாளில் பிற்பகல் 3.30 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2 மணிக்கு திருநெல்வேலியை அடையும்.

இதையும் படிக்க : எஸ்.ஐ.ஆர். பணியில் திமுக இரட்டை வேடம்…எதிர்க் கட்சிகள் பரபரப்பு குற்றச்சாட்டு!

இதற்கிடையில், திருநெல்வேலி – தாம்பரம் சிறப்பு ரயில் (06166) ஜனவரி 12, 2026 மற்றும் ஜனவரி 19, 2026 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 12.30 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு, பிற்பகல் 1.30 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். மறுமார்க்கமாக இந்த ரயில் (06165) மேலே குறிப்பிட்ட தேதிகளில் பிற்பகல் 4.40 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

அதேபோல், போத்தனூர் – சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06194) ஜனவரி 8, 2026 அன்று இரவு 11.30 மணிக்கு போடனூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடையும். மறுமார்க்கமாக இந்த ரயில் (06193) ஜனவரி 9, 2026 அன்று இரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9.05 மணிக்கு போத்தனூரை அடையும்.

இதையும் படிக்க : புத்தகப் பிரியர்களே.. நாளை தொடங்குகிறது 49வது சென்னை புத்தக கண்காட்சி.. சிறப்புகள் என்ன?

மேலும், சென்னை சென்ட்ரல் – தூத்துக்குடி சிறப்பு ரயில் (06151) ஜனவரி 12, 2026 மற்றும் 19, 2026 ஆகிய தேதிகளில் இரவு 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மதியம் 12.15 மணிக்கு தூத்துக்குடியை அடையும். இதன் எதிர்திசை ரயில் (06152) ஜனவரி 13, 2026 மற்றும் ஜனவரி 20, 2026 ஆகிய தேதிகளில் மாலை 4.50 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஜனவரி 8, 2026 காலை 8 மணிக்கு தொடங்கும் என்றும், போத்தனூர் – சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு ஜனவரி 7, 2026 முதலே தொடங்கும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகை காலத்தில் பயணிகள் இந்த கூடுதல் சிறப்பு ரயில்களை பயன்படுத்தி பயணம் செய்யலாம் என ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Follow Us