அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18 + 1 தொகுதிகள் ஒதுக்கீடு? வெளியான தகவல்!!
18 + 1 constituencies allotted to PMK: அன்புமணி தரப்பில் இருந்து 20க்கும் மேற்பட்ட தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. அதேபோல், ராமதாஸ் தரப்பை கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்ற நிபந்தனையையும் பாமக முன்வைத்ததாக தகவல்கள் வெளியானது.
சென்னை, ஜனவரி 07: 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணயில் அன்புமணி தரப்பு பாமகவுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, 18 தொகுதிகளுடன், ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. முன்னதாக, சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்திற்கு இன்று காலை பாமக தலைவர் அன்புணி ராமதாஸ் நேரில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, அக்கட்சிகளுக்கு இடையே கூட்டணி இறுதி செய்யப்பட்டது.
இதையும் படிக்க: “அதிமுக வேட்பாளராக போட்டியிட யாரையும் அணுகி ஏமாற வேண்டாம்”.. இபிஎஸ் எச்சரிக்கை!
இரண்டாக பிரிந்த பாமக:
தொடர்ந்து, வலுவான தொகுதிகளை கேட்டு பெற அன்புமணி தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 23 தொகுதிகளை அதிமுகவிடம் இருந்து கேட்டுப்பெற்ற பாமக, அதில் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேசமயம், தற்போது அந்த 5 சட்டமன்ற உறுப்பினர்களில் 3 பேர் அன்புமணி ராமதாஸ் தரப்புடனும், 2 பேர் ராமதாஸ் தரப்புடனும் உள்ளனர். தற்போது அன்புமணி தரப்பு அதிமுகவுன் கூட்டணியை இறுதி செய்து தொகுதிகளையும் கேட்டுப் பெற்ற நிலையில், ராமதாஸ் தரப்பு என்ன செய்யப்போகிறது என்ற தகவல் இல்லை.
அந்தவகையில், இன்று காலையில் நடந்த கூட்டணி பேச்சுவார்த்தையின் போது கூட, அன்புமணி ராமதாஸ் தரப்பில் இருந்து 20க்கும் மேற்பட்ட தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. அதேபோல், ராமதாஸ் தரப்பை கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்ற நிபந்தனைகளையும் பாமக சில அம்சங்களாக முன்வைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
18+1 தொகுதிகள் ஒதுக்கீடு:
ஆனால், 18 தொகுதிகளை மட்டுமே அதிமுக ஒதுக்கியுள்ளதாக தெரிகிறது. அதேசமயம், ஒரு மாநிலங்களவை தொகுதியை தருவதற்கும் முன்வந்துள்ளது. அதாவது, 18+1 என்ற கணக்கில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. அதோடு, ராமதாஸ் தரப்பையும் கூட்டணிக்கு கொண்டு வர அதிமுக தரப்பு முயற்சி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராமதாஸ் தரப்பை கூட்டணிக்கு கொண்டு வரக்கூடாது என்று அன்புமணி கண்டிஷன் போட்டபோதும், அதிமுக அதனை ஏற்கவில்லை எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: “திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி ஊழல்”.. ஆளுநரிடம் இபிஎஸ் பரபரப்பு புகார்!!
அதிமுக அழைப்பை ஏற்குமா ராமதாஸ் தரப்பு?
இதற்காக சி.வி.சண்முகம் தலைமையில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவர் நேரடியாக ராமதாஸை அவரது இல்லத்தில் சென்று சந்திக்க உள்ளதாக தெரிகிறது. அதன்படி, அவருக்கும் குறிப்பிட்ட சில தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், அதிமுகவின் அழைப்பை ராமதாஸ் தரப்பு ஏற்குமா? என்பது தெரியவில்லை. அவர்களது தரப்பில் தற்போது வரை எந்த தகவலும் வெளியில் வரவில்லை என்பதால், அவர்களது கூட்டணி கணக்கு எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை.