இறுதிக்கட்டத்தை எட்டிய SIR பணிகள்.. படிவங்களை சமர்ப்பிக்க நாளை இறுதி நாள்.. மக்களே கடைசி வாய்ப்பு!!
Special intensive revision: வரும் டிசம்பர் 16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்த பட்டியலில் பெயர் இடம்பெறவில்லை என்றால், டிசம்பர் 16 முதல் ஜனவரி 15 வரை பெயர் சேர்க்கவும், திருத்தங்கள் செய்யவும் வாய்ப்பு வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த நவம்பர் 4ம் தேதி தொடங்கிய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR), தற்போது இறுதிக்கட்டை எட்டி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இறந்தவர்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் பெயர்களை நீக்கி, தகுதியான பட்டியலாக மாற்ற தேர்தல் ஆணையம் முயற்சி செய்து வருகிறது. இதற்காக, விநியோகிக்கப்பட்ட கணக்கீட்டு படிவங்களில் 99.55% படிவங்கள் நேற்றைய நிலவரப்படி, பதிவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் தற்போது 6.41 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ள நிலையில், இதில் இறந்தவர்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் உள்ளவர்கள் எண்ணிக்கை 45 லட்சத்தை தாண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: தவெக தலைவர் விஜய்யின் செயல்பாடுகளில் திடீர் மாற்றம்…என்ன காரணம்!
நாளையுடன் இறுதி நாள்:
தமிழகத்தில் SIR பணிகள் கடந்த நவம்பர் 4ஆம் தேதி தொடங்கின. இப்பணிகள் டிசம்பர் 4ஆம் தேதி முடிய இருந்தது. ஆனால், டிசம்பர் 11ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இதனால் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், கடந்த 1ம் தேதி நிலவரப்படி, 25 லட்சம் பேர் இறந்தவர்கள், மேலும் 40 லட்சம் பேர் நிரந்தரமாக வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து விட்டது தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். SIR பணிக்கான கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டு, அவை திரும்பப் பெறப்பட்டு பதிவு செய்யும் பணிகள் நாளையுடன் முடிகின்றன.




டிசம்பர் 16ல் வரைவு பட்டியல்:
அதன் தொடர்ச்சியாக, வரும் டிசம்பர் 16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்த பட்டியலில் பெயர் இடம்பெறவில்லை என்றால், டிசம்பர் 16 முதல் ஜனவரி 15 வரை பெயர் சேர்க்கவும், திருத்தங்கள் செய்யவும் வாய்ப்பு வழங்கப்படும். இந்த ஒரு மாத காலத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுமா என்று விரைவில் தேர்தல் ஆணையம் அறிவிக்கும். இந்த காலகட்டத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, பிப்ரவரி 14ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும்.
மேலும் படிக்க: அன்புமணிக்கும் பாமகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை.. ராமதாஸ் தான் பாமக – எம்.எல்.ஏ அருள் திட்டவட்டம்..
99.55% பணி நிறைவு:
தமிழகத்தில் நேற்று வரை நடந்த SIR பணிகளின் விவரங்களை, தலைமை தேர்தல் அதிகாரி அச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார். அதன்படி, நேற்று (டிசம்பர் 9)வரை 6 கோடி 40 லட்சத்து 84 ஆயிரத்து 624 படிவங்கள் (99.95%) வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 6 கோடி 38 லட்சத்து 25 ஆயிரத்து 877 படிவங்கள் (99.55%) பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதம் 2,88,710 படிவங்களே உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், மீதமுள்ளவர்களும் படிவங்களை விரைந்து சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.