“மதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது…?” திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து!!
Thiruparankundram issue: மாநிலங்களவையிலும் இவ்விவகாரம் குறித்து விவாதிக்க கோரி திமுக தரப்பில் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், அந்த நோட்டீஸை ஏற்க சபாநாயகர் சி.பி.ராதாகிருஷ்ணன் மறுத்ததால், திமுக எம்.பிக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். அதேசமயம், தமிழக அரசு தொடர்ந்து வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
சென்னை, டிசம்பர் 05: திருப்பரங்குன்றம் (Thiruparankundram) மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் நேற்று 2வது முறையாக உத்தரவிட்டும், போலீஸார் அனுமதி வழங்க மறுத்தனர். இதன் காரணமாக தமிழகத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக பாஜக, இந்து அமைப்புகள் தமிழகம் முழுவதும் இப்பிரச்சனைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. அதேபோல், திமுக கூட்டணி கட்சிகளும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தனி நீதிபதியின் தீர்ப்பை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதோடு, மாநிலங்களவையிலும் இவ்விவகாரம் குறித்து விவாதிக்க கோரி திமுக தரப்பில் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், அந்த நோட்டீஸை ஏற்க சபாநாயகர் சி.பி.ராதாகிருஷ்ணன் மறுத்ததால், திமுக எம்.பிக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
மேலும் படிக்க: 2வது முறையும் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுப்பு.. திருப்பரங்குன்றத்தில் நீடிக்கும் பதற்றம்!
உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு:
அதேசமயம், திருப்பரங்குன்றம் தீப வழக்கை தலைமை நீதிபதி அமர்வில் அவசர வழக்காக விசாரிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் முறையிட்டது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நேற்றைய தினம் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது. அதில், 100 ஆண்டுகளாக தீபம் ஏற்றப்படும் இடத்துக்கு பதில் வேறு இடத்தில் தீபம் ஏற்ற அனுமதி கேட்பதால் பிரச்சனை எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு:
அதோடு, புதிதாக தீபம் ஏற்ற சொல்லும் இடம் தர்கா அமைந்துள்ள இடத்தில் இருந்து 15 மீட்டரில் தான் இருப்பதாகவும், 2014ல் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புப்படியே வழக்கமான இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. தேவையில்லாத சர்ச்சைகளை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே, புதிய இடத்தில் அனுமதி வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின் மூலம் தமிழ்நாட்டில் சட்டம்– ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது. இந்நிலையில், ஆவணங்கள் சரியாக தரப்பட்டு இருந்தால் வரிசை எண் அடிப்படையில் பட்டியலிடப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: திருப்பரங்குன்றம் விவகாரம்… அரசின் மனுவில் மறைமுக நோக்கம்…. நிராகரித்த நீதிமன்றம்
முதல்வர் ஸ்டாலின் கருத்து:
மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ……….. அரசியலா?
மக்கள் முடிவு செய்வார்கள்.🚆 மெட்ரோ இரயில்,
🏥 #AIIMS,
🏭 புதிய தொழிற்சாலைகள் & வேலைவாய்ப்புகள்!– இவைதான் மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது!
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) December 5, 2025
இந்நிலையில், இப்படி பல்வேறு தரப்பிலும் பிரச்சனைகள் நடத்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், மாமதுரைக்கு தேவை வள்ளர்ச்சி அரசியலா அல்லது……. அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், மெட்ரோ ரயில், #AIIMS, புதிய தொழிற்சாலைகள் & வேலைவாய்ப்புகள்! – இவைதான் மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.