அரசு விடுதியில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. கைதான காவலாளி.. தாம்பரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
Chennai Horror: தாம்பரம் அருகே உள்ள அரசு ஆதரவற்ற பெண்கள் விடுதியில் 13 வயது சிறுமி ஒப்பந்த காவலாளியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, காயமடைந்தார். தப்பிக்க முயன்ற போது, கீழே விழுந்து இரண்டு கால்களும் முறிந்தன. காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார். அரசு பெண் காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கும் என அறிவித்துள்ளது.

சென்னை ஜூன் 10: சென்னை தாம்பரம் (Chennai Tambaram) அருகே உள்ள அரசு ஆதரவற்ற பெண்கள் விடுதியில் 13 வயது சிறுமி படுக்கையில் தூங்கிக்கொண்டிருந்த போது, ஒப்பந்த காவலாளி தாக்கி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது. தப்பிக்க முயன்ற சிறுமி கீழே தள்ளப்பட்டதால், இரண்டு கால்களும் முறிவடைந்தன. இந்த தகவலை மருத்துவமனை போலீசாருக்கு தெரிவித்தது. தொடர்ந்து, சிசிடிவி பதிவு மூலம் காவலாளி மேத்யூ அடையாளம் காணப்பட்டு, போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவம் பெற்றோர்களிலும் பொதுமக்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் குழந்தைகள் விடுதிகளில் பெண் காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் (Minister Geetha Jeevan) அறிவித்துள்ளார்.
அரசு விடுதியில் நடந்த கொடூரம்
சென்னை தாம்பரம் அருகே சிட்லபாக்கம் பகுதியில் உள்ள அரசு ஆதரவற்ற பெண்கள் காப்பகத்தில் தங்கி 8-ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயது சிறுமி, பாதுகாப்பாக இருக்க வேண்டிய இடத்தில் காவலாளியால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளார். மேலும், சிறுமியின் இரண்டு கால்களும் உடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.




காப்பகத்தில் நடந்த சம்பவ விவரம்
தந்தையை இழந்த திருக்கோவிலூர் சேர்ந்த சிறுமி, குடும்ப சூழ்நிலை காரணமாக தாம்பரத்தில் உள்ள அரசு விடுதியில் தங்கி கல்வி பயின்று வந்தார். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் மாணவிகள் பலர் ஊருக்குச் சென்ற நிலையில், அந்த சிறுமி மட்டும் விடுதியில் தங்கியிருந்தார்.
அதிகாலையில் சிறுமி தூங்கிக் கொண்டிருந்தபோது, முகத்தை மூடியபடியே ஒரு காவலாளி வந்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி மருத்துவர்களிடம் தெரிவித்தார். அந்த வேளையில் தப்பிக்க முயன்ற சிறுமி கீழே தள்ளப்பட்டதால், இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது.
பெண் காவலர்களை நியமிக்க முடிவு
கொடூர அதிமுக ஆட்சிக் காலத்தில் குற்றவாளிகளை பாதுகாத்தது போல் இல்லாமல், பெண்களின் உண்மையான பாதுகாப்பிற்கு துணை நின்று, குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதே திராவிட மாடல் அரசின் செயல்பாடாகும்!
அரசு சேவை இல்ல விடுதிகளில் பெண் காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என மாண்புமிகு… pic.twitter.com/M34V3v2z5f
— DMK IT WING (@DMKITwing) June 9, 2025
மருத்துவமனையில் புகார் – போலீசார் அதிரடி
சிறுமி குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், சம்பவம் குறித்து மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் வழங்கினர். மேல்சிகிச்சைக்காக சிறுமி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சிசிடிவி பதிவுகள் ஆய்வில் சம்பவத்தில் தொடர்புடையதாக உறுதி செய்யப்பட்ட ஒப்பந்த காவலாளி மேத்யூ, பாக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
பொதுமக்கள் கோபம் – மாணவிகள் பெற்றோர் வருகை
இந்த கொடூர சம்பவம் வெளியானதுடன், விடுதியில் தங்கியுள்ள மாணவிகள் பெற்றோர் அங்கு திரண்டனர். சிறுமியின் நிலையைப் பார்த்து பொதுமக்களும் கோபம் தெரிவித்தனர். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலத்தில் பாதுகாப்பு கேள்விக்குறி
இந்த சம்பவம் தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களின் ஒரு பகுதியாகும் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், “திமுக ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் 6597 படுகொலைகள் நடந்துள்ளன. பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது,” என விமர்சித்தார். எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கல் இசம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்
சென்னை தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் 8-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, விடுதியின் காவலாளி கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.
அரசு சேவை இல்லத்திலேயே ஒரு 8-ம் வகுப்பு மாணவிக்கு…
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) June 9, 2025
தமிழக அரசு நடவடிக்கை
சிறுமிக்கு நேர்ந்த வன்கொடுமை குறித்து பாதிக்கப்பட்ட விடுதியில் பெண் காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். மேலும், சிறுமிக்கு சிகிச்சை வழங்கி முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் பாதுகாப்பாக இருக்க வேண்டிய இடங்களிலும் பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதைக் காட்டுகிறது. இதனைத் தவிர்க்க அரசு கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியம் இப்போது மிக முக்கியமாகியுள்ளது.