தமிழகத்தை உலுக்கும் திமுகவின் அடுத்த ஊழல்.. தக்க தண்டனை பெற்றுத்தர வேண்டும் – அன்புமணி காட்டம்..
Anbumani Statement: ஊழல் குறித்தும், ஏற்கனவே ஆதாரங்கள் வழங்கப்பட்ட இரு ஊழல்கள் குறித்தும் தமிழக காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். இந்த ஊழல்களில் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி, கடுமையான தண்டனை பெறச்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை, டிசம்பர் 9, 2025: திமுகவின் மூத்த அமைச்சர் கே. என். நேரு மீது ரூ. 1,020 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் டிஜிபிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் பிரிவுகளில் முறைகேடு நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு டெண்டருக்கும் கிட்டத்தட்ட 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை லஞ்சம் பெறப்பட்டதாகவும், இந்த ஊழலில் ரூபாய் 1,020 கோடி வரை பணம் வசூலிக்கப்பட்டிருக்கலாம் எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், 258 பக்கங்களைக் கொண்ட ஆவணங்களையும் தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு அனுப்பி, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையான கண்டனம் தெரிவித்து, இது தொடர்பாக உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க: அன்புமணிக்கும் பாமகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை.. ராமதாஸ் தான் பாமக – எம்.எல்.ஏ அருள் திட்டவட்டம்..
திமுக அரசில் தொடரும் ஊழல்:
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ஒப்பந்தங்களை வழங்கியதில் ₹1,020 கோடி அளவுக்கு கையூட்டு மற்றும் கட்சி நிதி வசூலிக்கப்பட்டிருப்பதற்கான ஆதாரங்களை தமிழக காவல்துறை தலைமை இயக்குனருக்கு அனுப்பியுள்ள அமலாக்கத்துறை, அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்யும்படி கேட்டுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே இதே துறையில் வேலைவாய்ப்பு வழங்கியதில் ₹888 கோடிக்கு ஊழல் நடந்ததற்கான ஆதாரங்களை அமலாக்கத்துறை வழங்கியிருக்கும் நிலையில், இப்போது மேலும் ₹1,020 கோடி கையூட்டு வாங்கப்பட்டிருப்பதாக கூறப்படுவது அதிர்ச்சியளிக்கிறது.” என தெரிவித்துள்ளார்.
“₹888 கோடி வேலைவாய்ப்பு ஊழலுக்கான ஆதாரங்கள் அமலாக்கத்துறையிடம் எவ்வாறு சிக்கினவோ, அதேபோல் இந்த ஊழலுக்கான ஆதாரங்களும் சிக்கியுள்ளன. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அந்த சோதனையில் இந்த ஊழல் குறித்த ஆவணங்கள் கிடைத்ததாக தமிழக காவல்துறைக்கு எழுதிய கடிதத்தில் அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.
மேலும் படிக்க: பள்ளிக்கு செல்ல புறப்பட்ட மாணவி மயங்கி விழுந்து மரணம்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!
அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகள் தெளிவாக உள்ளது:
டெண்டர் ஊழலுக்கான தொகைகள் எவ்வாறு பெறப்பட்டன? அவை ஹவாலா முறையில் எவ்வாறு சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டன? என்பது குறித்த ஆதாரங்கள், புகைப்படங்கள், வாட்ஸ்-அப் தகவல் பரிமாற்றங்கள் ஆகியவை அடங்கிய 252 பக்க ஆவணத்தையும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் காவல்துறை பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் ஆகியோருக்கு அனுப்பிய கடிதத்தில் அமலாக்கத்துறை மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறது.”
அண்மையில் சென்னையில் இராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களில் ‘குப்பை அள்ளும் ஒப்பந்தம்’ தனியாருக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து தூய்மைப் பணியாளர்கள் நூறு நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குப்பை அள்ளும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த திமுக அரசு, அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு அவர்களின் போராட்டத்தை சிதைத்தது.
அப்போதே ₹2,300 கோடி குப்பை அள்ளும் ஒப்பந்தத்தை பாதுகாக்கவும், அதற்காக தங்களுக்கு கிடைத்த பலனுக்கு நன்றிக்கடன் செலுத்தவும் தான் திமுக அரசு தூய்மைப் பணியாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்ததாக நான் குற்றஞ்சாட்டியிருந்தேன் என அவர் குறிப்பிட்டார்.
வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்:
“இத்தகைய குப்பை அள்ளும் ஒப்பந்தங்களை தனியாருக்கு வழங்குவதற்காகவும் கையூட்டு பெறப்பட்டதாக அமலாக்கத்துறை அனுப்பிய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. திமுக ஆட்சியில் கடந்த காலங்களில் நடந்த ₹4,730 கோடி மணல் கொள்ளை ஊழல், ₹888 கோடி வேலைவாய்ப்பு ஊழல் ஆகியவற்றுக்கான ஆதாரங்களை அமலாக்கத்துறை அனுப்பியும், அதன் மீது வழக்கு தொடர் திமுக ஆட்சியாளர்கள் அஞ்சி வருகின்றனர்.
நகராட்சி நிர்வாகத் துறையில் நடந்திருக்கக் கூடிய ₹1,020 கோடி டெண்டர் ஊழலையும் அதேபோல் கிடப்பில் போட்டுவிடக் கூடாது. இந்த ஊழல் குறித்தும், ஏற்கனவே ஆதாரங்கள் வழங்கப்பட்ட இரு ஊழல்கள் குறித்தும் தமிழக காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். இந்த ஊழல்களில் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி, கடுமையான தண்டனை பெறச்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.