காவல் நிலையத்தில் காமுகத்தனம்.. புகாரளிக்க வந்த பெண்ணுக்கு ஆபாச எஸ்எம்எஸ்.. எஸ்.ஐ-க்கு அதிரடி ஆப்பு!
Palani SI Rajagopal Suspended: திண்டுக்கல் மாவட்டத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணின் செல்போன் எண்ணுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதாக பழனி தாலுகா காவல் நிலையத்தில் பணி புரிந்த உதவி ஆய்வாளர் ராஜகோபாலை சஸ்பெண்ட் செய்து சரக டிஐஜி சசி மோகன் உத்தரவிட்டார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகாவில் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலையத்தில் ராஜகோபால் என்பவர் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் தனிப்பட்ட பிரச்சனை தொடர்பாக புகார் அளிப்பதற்காக காவல் நிலையத்துக்கு வந்துள்ளார். அப்போது, காவல் நிலையத்தில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் ராஜகோபால் அந்த பெண்ணிடம் வழக்கு புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்டார். அப்போது, புகார் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொள்வதற்காக அந்த பெண்ணின் செல்போன் என்னை பெற்றுள்ளார். ஆனால், அந்த பெண் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்காமல், அந்த பெண்ணின் செல்போனுக்கு ஆபாசமான மெசேஜ் அனுப்பியதுடன், அநாகரிகமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
காவல் உயர் அதிகாரியிடம் பெண் புகார்
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் உதவி ஆய்வாளர் ராஜகோபால் அனுப்பிய மெசேஜ் உள்ளிட்ட ஆதாரங்களுடன் காவல்துறையின் உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு அதிகாரி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், உதவி ஆய்வாளர் ராஜகோபால் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், அவர் அந்த பெண்ணுக்கு ஆபாசமான மெசேஜ் அனுப்பியது உறுதி செய்யப்பட்டது.
மேலும் படிக்க: திருச்சி செவிலியர் மாணவி உயிரிழப்பு… தீவிர விசாரணையில் சிறப்பு குழு.. விரைவில் அறிக்கை தாக்கல்!




பழனி உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்
அதன்படி, பழனி தாலுகா காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் உதவி ஆய்வாளர் ராஜகோபாலை சஸ்பெண்ட் செய்து திண்டுக்கல் சரக டி. ஐ. ஜி. சசி மோகன் உத்தரவிட்டார். காவல் நிலையத்துக்கு பாதுகாப்பு தேடி வரும் பொது மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய காவல் அதிகாரியே இது போன்ற செயலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பாலியல் அச்சுறுத்தல்கள் ஆகியவை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்தும் வகையில் சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.
வேலியே பயிரை மேய்ந்த கதை போல…
அதன்படி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை செயல்பாடு தொடங்கி வைக்கப்பட்டது. இருந்தாலும், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் தொடர்ந்து வருகின்றன. இது ஒரு புறம் இருந்தாலும், பெண்கள், பெண் குழந்தைகள் உள்பட பொதுமக்களை பாதுகாக்க கூடிய காவல்துறையே சேர்ந்தவர்களே பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்களில் ஈடுபடுவது வேலையே பயிரை மேய்ந்த கதை போல இருக்கிறது.
மேலும் படிக்க: அக்னி நட்சத்திரத்துக்கு ஆப்பு வைத்த ஆட்டோ ஓட்டுநர்! இன்ஸ்டாகிராமில் வைரலாகும் வந்தவாசியின் குளு குளு ஆட்டோ!