“ஓபிஎஸ் வெளியேறியது அதிமுகவினருக்கு தீபாவளி”.. சி.வி.சண்முகம் விமர்சனம்!!
ஜெயலலிதாவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு திமுகவுடன் கைகோர்த்தார் ஓ.பன்னீர்செல்வம். இப்படிப்பட்ட கைக்கூலிகள், எட்டப்பர்களை இந்த இயக்கத்தில் இருக்கக் கூடாது என்று அதிமுக பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றி, இவர்களை வெளியேற்றியது. எல்லோரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்றார். ஆனால் என்றைக்காவது யாருடனாவது ஒருங்கிணைந்து போயிருக்கிறாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை, பிப்ரவரி 28: ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதவி கொடுத்தால் நண்பர்கள், கொடுக்கவில்லை என்றால் துரோகிகள். அவர் காலத்துக்கு ஏற்ப பச்சோந்தி போல நிறம் மாறுபவர் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கடுமையாக விமர்சித்துள்ளார். அரசியலில் யாரும் எதிர்பாராத வகையில், ஜெயலலிதாவின் விசுவாசியாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் நேற்றைய தினம் திமுகவில் இணைந்து அதிமுகவினருக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்தார். முன்னதாக, தான் அரசியலில் தனித்து விடப்பட்டதாகவும், சங்கரமடத்தில் சென்று அமர்ந்துவிடவா? அதிமுக இணைப்பு குறித்து அமித்ஷா முன்னெடுத்த பலன்களும் கைக்கூடவில்லை என்றெல்லாம் வெளிப்படையாக பேசியிருந்தார். அதன் தொடர்ச்சியாக அதிரடியாக அவர் திமுகவில் இணைந்துள்ளார். அக்கட்சியில் அவருக்கு விரைவில் முக்கியப் பதவி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இதையும் படிக்க: திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்.. இணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படுமா?
துரோகிதான் மிக மிக ஆபத்தானவர்:
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, எதிரியைவிட பக்கத்தில் இருக்கும் துரோகிதான் மிக மிக ஆபத்தானவர். கூடவே இருந்த நண்பன், துரோகியாக மாறினால் அவன் ஆயிரம் எதிரிக்கு சமம். இந்த இயக்கத்தை அழிக்க வேண்டும் என்றால் இந்த அதிமுகவில் இருந்தே ஒருவரை நாம் கைக்கூலியாக உருவாக்க வேண்டும். அந்த கைக்கூலியை வைத்து பிளவுபடுத்தி, சின்னத்தை முடக்கி, இந்த இயக்கத்தை அழித்துவிடலாம் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நபர் தான் இன்று திமுகவில் இணைந்திருக்கின்ற ஓ.பன்னீர்செல்வம்.
ஆமையை வீட்டுக்குள் விட்டால் என்னாகும்?
ஒரு காலத்தில் நான் ஜெயலலிதாவின் விசுவாசி என்று சொல்லி ஜெயலலிதாவையும் ஏமாற்றி, அவரை சுற்றியிருந்த அந்தக் குடும்பத்தாரையும் ஏமாற்றி, தமிழகத்தின் முதலமைச்சர் பதவி வரை அனுபவித்தார். ஆனால் ஜெயலலிதாவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு திமுகவுடன் கைகோர்த்தார் ஓ.பன்னீர்செல்வம். இப்படிப்பட்ட கைக்கூலிகள், எட்டப்பர்களை இந்த இயக்கத்தில் இருக்கக் கூடாது என்று அதிமுக பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றி, இவர்களை வெளியேற்றியது. வெளியேற்றிய பிறகு பல்வேறு டிராமாக்களைப் போட்டார், நடித்தார், நாடகம் போட்டார், அழுதார் உருண்டார், ரொம்ப நியாயஸ்தன் மாதிரி எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம், என்னை சேர்த்துக் கொள்ளுங்கள் என்றார். ஆமையை வீட்டுக்குள் விட்டால் என்னாகும்? ஆமை அமைதியாகத்தான் இருக்கும். ஆனால் வீடு விளங்காமல் போய்விடும்.
மேலும் படிக்க: திமுகவுடன் தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி.. 35+2 கேட்டு காங்கிரஸ் பிடிவாதம்?..
அதிமுகவினருக்கு பொங்கல், தீபாவளி:
எல்லோரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்றார். ஆனால் என்றைக்காவது யாருடனாவது ஒருங்கிணைந்து போயிருக்கிறாரா? திமுக தலைவரைப் போய் பார்க்கிறார், அமித்ஷாவைப் போய் பார்க்கிறார். நாட்டு மக்களுக்கு இன்று துரோகம் தோலுரிக்கப்பட்டுக் காட்டப்பட்டிருக்கிறது. துரோகம் என்றைக்குமே ஜெயித்ததாக சரித்திரம் இல்லை. ஒரு விதத்தில் அதிமுகவினருக்கு இன்று தான் பொங்கல், தீபாவளி. ஏனெனில், இப்போது நாங்கள் சட்டசபை வெற்றித் தேர்தலை எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.