Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நிர்வாகிகளுடன் ஆலோசனை.. யாருடன் கூட்டணி? இன்று அறிவிக்கும் ஓபிஎஸ்

O Panneerselvam Meeting: செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓ. பன்னீர்செல்வம், தை மாதம் முடிவில் முடிவை அறிவிப்பேன் என தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில், ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் வெவ்வேறு கட்சிகளில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக, ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த வைத்தியலிங்கம் சமீபத்தில் திமுகவில் இணைந்தது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது.

நிர்வாகிகளுடன் ஆலோசனை.. யாருடன் கூட்டணி? இன்று அறிவிக்கும் ஓபிஎஸ்
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 29 Jan 2026 08:16 AM IST

ஜனவரி 29, 2026: 2026 சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக ஜனவரி 29, 2026 தேதியான இன்று, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்து வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தனது நிர்வாகிகளுடன் ஆலோசித்து யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அரசியல் கட்சிகள் அனைத்தும் அதற்கான பணிகளை மும்மரமாக மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தைப் பொருத்தவரையில் தற்போது நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. திமுக, அதிமுக, தமிழக வெற்றி கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை இதில் அடங்கும்.

நெருங்கும் சட்டமன்ற தேர்தல்:

திமுக கூட்டணியில் தற்போது வரை எந்தவொரு மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து வருகிறது. அதிமுகவைப் பொருத்தவரையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக–பாஜக கூட்டணியில் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் படிக்க: தைப்பூச திருவிழா..திருச்செந்தூர் முருகன் கோயிலில் பூஜை நேரங்கள் மாற்றம்!

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தான் வெளியேறுவதாக ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, தற்போது வரை அடுத்த கட்ட நகர்வை எடுக்காமல் இருந்து வருகிறார். அதாவது, யாருடன் கூட்டணி அமைப்பது, யாருடன் கைகோர்த்து இந்தத் தேர்தலை சந்திப்பது என்பது தொடர்பாக தற்போது வரை எந்தவொரு அதிகாரப்பூர்வ முடிவும் எடுக்கப்படவில்லை.

யாருடன் கூட்டணி? இன்று அறிவிக்கும் ஓபிஎஸ்:

சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓ. பன்னீர்செல்வம், தை மாதம் முடிவில் முடிவை அறிவிப்பேன் என தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில், ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் வெவ்வேறு கட்சிகளில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக, ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த வைத்தியலிங்கம் சமீபத்தில் திமுகவில் இணைந்தது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பெரியகுளத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், இன்று நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து பின்னர் முடிவை அறிவிப்பேன் என கூறிவிட்டு சென்றார். இதற்காக மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம். சையது கான் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அதிகரிக்கும் பகல் நேர வெப்பநிலை.. இனி மழை இல்லை.. வெயில் மட்டும்தான்..

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் யாருடன் கூட்டணி அமைப்பது என்ற நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்து வந்த ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் அதே கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாகவும், இல்லை என்றால் அவர் திமுக அல்லது தவெக (தமிழக வெற்றி கழகம்) கூட்டணியில் இணைவார் எனவும் யூகங்கள் நிலவி வருகின்றன.

ஆளுநர் பதிவி வழங்கப்படுமா?

தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓ. பன்னீர்செல்வம் இணைந்தால், அவருக்கு விரைவில் ஆளுநர் பதவி வழங்கப்படும் என டெல்லி பாஜக தரப்பில் அவரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு பல்வேறு யூகங்களுக்கு மத்தியில், ஓபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்னவாக இருக்கும் என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.