“கோட் சூட், டிபன் பாக்ஸ் செய்திகள் முக்கியமல்ல!”.. ஆட்சியில் நடப்பதை கவனியுங்கள்.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை!
"நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருப்பவரைப் பார்த்து அன்போடு கேட்டுக்கொள்வது என்னவென்றால், தயவுசெய்து இன்றைக்கு உங்களைப் பற்றியும், உங்கள் ஆட்சியைப் பற்றியும் ஊடகங்களில் வரக்கூடிய செய்திகளைப் படியுங்கள். அதனை முழுமையாகப் படித்து உண்மை எது என்பதைக் கண்டுபிடித்து, அதற்குரிய தகுந்த நடவடிக்கைகளை எடுங்கள் என்பதுதான் என்னுடைய அன்பான வேண்டுகோள்" என்று கேட்டுக்கொண்டார்.
சென்னை, ஜுன் 17: திமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமியின் குடும்பத் திருமண விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தற்போதைய தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கும் அவரது அரசுக்கும் சில முக்கிய கோரிக்கைகளையும், ஆலோசனைகளையும் முன்வைத்தார். அதோடு, விழாவில் திமுக-வின் 75 ஆண்டுகாலப் பயணம் மற்றும் ஆற்காடு வீராசாமியின் பங்களிப்பு குறித்து மு.க.ஸ்டாலின் உருக்கமாகப் பேசினார்.
இதையும் படிக்க: திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா மதிமுக?.. முதல்வர் விஜய்யை இன்று சந்திக்கிறார் வைகோ!!
ஆற்காடு வீராசாமியின் தியாகம் மற்றும் சிறைவாசம்:
“1976-இல் அவசரநிலை பிரகடனத்தின் போது நானும் அண்ணன் ஆற்காட்டாரும் சென்னை சிறையில் அடைக்கப்பட்டோம். சிறையில் சிட்டிபாபு உள்ளிட்டோர் அனுபவித்த கொடுமைகள் அனைவரும் அறிந்ததே சிறையில் நான் தெம்போடு இருந்ததற்கு ஆற்காட்டார் தான் காரணம். சிறைக்கொடுமைகளைத் தாங்கியதால் அவருக்கு ஒரு காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்டது. இன்றும் என் கையில் மிசா காலத்துத் தழும்பு இருக்கிறது. அதனால்தான் கலைஞர் அவரை ‘வைரம் பாய்ந்த தொண்டன்’ என்பார். அவரது வழிகாட்டுதலில் தான் நான் இன்று திமுக தலைவராகப் பொறுப்பேற்றுள்ளேன்” என்று குறிப்பிட்டார்.
“தேர்தல் தோல்வியால் திமுக அழியாது”:
தொடர்ந்து பேசிய அவர், “ஒரு மாநில கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு திமுக-வே உதாரணம். ஒரு தேர்தல் தோல்விக்கே பல கட்சிகள் காணாமல் போயிருக்கின்றன. ஆனால், 75 ஆண்டுகால கொள்கைக்காகவும், லட்சியத்திற்காகவும் பாடுபடும் திமுக, ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக மட்டுமே உழைக்கும்” என்றார்.
வைரலாகும் செய்திகள் குறித்து விமர்சனம்:
தற்போதைய சமூக ஊடக ட்ரெண்டுகள் குறித்துப் பேசிய அவர், “இன்றைக்குச் சோசியல் மீடியா எந்த அளவுக்குப் பரவியிருக்கிறது என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். ஆனால், இவை அனைத்தும் நாளடைவில் மறைந்து போகத்தான் போகிறது. சமூக ஊடகங்களைப் பார்க்கும்போது, ‘அவர் கோட் சூட் போட்டுக்கொண்டு வந்தார், டிபனை கையில் எடுத்துக்கொண்டு வந்தார், வாட்ச் கட்டியிருந்தார், செஸ் விளையாடினார். இன்றைக்குக் கோட்டுக்கு பதிலாக பட்டுச் சட்டை, வேட்டி கட்டி வந்தார்’ என்றெல்லாம் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இவையா செய்திகள்? இவையெல்லாம் தாண்டி நாட்டில் நடைபெறக்கூடிய அக்கிரமங்கள் அனைத்தும் செய்திகளாக வந்துகொண்டுதான் இருக்கின்றன” என்றார்.
முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை:
தொடர்ந்து தமிழக முதலமைச்சருக்குத் தனது ஆலோசனையை வழங்கிய ஸ்டாலின், “நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருப்பவரைப் பார்த்து அன்போடு கேட்டுக்கொள்வது என்னவென்றால், தயவுசெய்து இன்றைக்கு உங்களைப் பற்றியும், உங்கள் ஆட்சியைப் பற்றியும் ஊடகங்களில் வரக்கூடிய செய்திகளைப் படியுங்கள். அதனை முழுமையாகப் படித்து உண்மை எது என்பதைக் கண்டுபிடித்து, அதற்குரிய தகுந்த நடவடிக்கைகளை எடுங்கள் என்பதுதான் என்னுடைய அன்பான வேண்டுகோள்” என்று கேட்டுக்கொண்டார்.
இதையும் படிக்க: வீ த லீடர்ஸ் இயக்கம் விரைவில் கட்சியாக மாறும்; முதல் பாட்காஸ்டில் அண்ணாமலை சொன்ன முக்கிய தகவல்
கலாநிதி வீராசாமிக்கு பாராட்டு:
நாடாளுமன்ற உறுப்பினரும், ஆற்காடு வீராசாமியின் மகனுமான கலாநிதி வீராசாமி குறித்துப் பேசிய ஸ்டாலின், “தம்பி உதயநிதி சொன்னது போல, கலாநிதி வீராசாமி மிகவும் அமைதியானவர், அடக்கமானவர். தொலைக்காட்சி விவாதங்களாக இருந்தாலும் சரி, நாடாளுமன்றக் கூட்டங்களாக இருந்தாலும் சரி, கழகம் கொடுக்கும் எந்தப் பணியையும் சிறப்பான முறையில் செய்து முடிக்கக்கூடிய ஆற்றல் கொண்ட மக்கள் சேவகர்” என்று பாராட்டினார்.