வீ த லீடர்ஸ் இயக்கம் விரைவில் கட்சியாக மாறும்; முதல் பாட்காஸ்டில் அண்ணாமலை சொன்ன முக்கிய தகவல்
"வீ த லீடர்ஸ் இயக்கத்தை சரியான பாதையில் கொண்டு செல்வேன். இந்த இயக்கம் கட்சியாக மாறினால், அதன் தன்மை வேறு மாதிரியாக இருக்கும். முன்பிருந்த கட்சிகளிலோ அல்லது தற்போது இருக்கும் எந்தக் கட்சியிலோ உள்ள யாரிடமும் நான் தொலைபேசி மூலம் பேசியதில்லை என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
ஜூன் 17, 2026: ஜூலை மாதத்தில் இருந்து அண்ணாமலை தொடங்கியுள்ள “வீ த லீடர்ஸ்” என்ற இயக்கம் அரசியல் கட்சியாக செயல்படும் என்றும், அதன் செயல்பாடுகள் தீவிரமாக இருக்கும் என்றும் இன்று வெளியிட்ட தனது பாட்காஸ்டில் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, கடந்த சில மாதங்களாக பல்வேறு காரணங்களால் பாஜகவில் தீவிரமாக செயல்படாமல் அமைதி காத்து வந்தார். இந்தச் சூழலில், அவர் பாஜகவில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியானது. அதனைத் தொடர்ந்து, தனது ராஜினாமா கடிதத்தை டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து அளித்திருந்தார். அந்த ராஜினாமாவை பாஜக மேலிடமும் ஏற்றுக்கொண்டது.
புதிய அரசியல் பாதை தொடங்கிய அண்ணாமலை:
இதையடுத்து, ஜூன் 5-ம் தேதி தனது புதிய அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, பாஜகவில் இருந்து விலகியதற்கான காரணம் என்ன, அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அவர் விரிவாக பேசியிருந்தார்.
அப்போது, தற்போதைக்கு “வீ த லீடர்ஸ்” என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், தன்னார்வலர்கள் யார் வேண்டுமானாலும் ஆன்லைன் மூலம் அதில் இணையலாம் எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், படிப்படியாக இது மாபெரும் அரசியல் கட்சியாக உருவாக்கப்படும் என்றும், தற்போது இயக்கமாக மட்டுமே செயல்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
வீ த லீடர்ஸ் இயக்கத்தில் 18 லட்சம் உறுப்பினர்கள்:
இந்த நிலையில், அவருக்கு ஏராளமான மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். தற்போது வரை “வீ த லீடர்ஸ்” இயக்கத்தில் 18 லட்சத்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அண்ணாமலை செல்லும் இடங்களிலெல்லாம் மக்கள் பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: “வளர்த்த கடா மார்பில் பாய்கிறது!”.. சேர்த்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி வைப்பாரா?.. விஜயபாஸ்கருக்கு ஆர்.பி.உதயகுமார் சரமாரி கேள்வி!
இந்தச் சூழலில், தனது முதல் பாட்காஸ்ட் இன்று வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டிருந்தார். அதன்படி, இன்று காலை 10 மணிக்கு தனது YouTube சேனல் மூலம் பாட்காஸ்ட் ஒளிபரப்பப்பட்டது.
ஜூலை மாதம் முதல் செயல்பாடுகள் தீவிரமாக இருக்கும்:
அப்போது பேசிய அவர், “வீ த லீடர்ஸ் இயக்கத்தை சரியான பாதையில் கொண்டு செல்வேன். இந்த இயக்கம் கட்சியாக மாறினால், அதன் தன்மை வேறு மாதிரியாக இருக்கும். முன்பிருந்த கட்சிகளிலோ அல்லது தற்போது இருக்கும் எந்தக் கட்சியிலோ உள்ள யாரிடமும் நான் தொலைபேசி மூலம் பேசியதில்லை. எனது இயக்கத்தில் இணையும்படி யாரையும் அழைக்கவில்லை. எனது அறைகூவலை ஏற்று இயக்கத்தில் இணைந்த சகோதர, சகோதரிகளுக்கு நன்றி.
வரவிருக்கும் ஜூலை மாதம் முதல் இது அரசியல் கட்சியாக செயல்படும். அப்போது இந்தக் கட்சியின் செயல்பாடுகள் மிகவும் தீவிரமாக இருக்கும்” எனத் தெரிவித்தார். அதேபோல், இந்த பாட்காஸ்டை தான் பிறந்து வளர்ந்த சொந்த மண்ணிலிருந்து வெளியிட்ட அவர், தனது சிறுவயது நினைவுகளையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.