நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்.. டெல்லி விரைந்த 4 தமிழ்நாடு அமைச்சர்கள்… மீட்புப் பணிகளில் வேகம்!!
Tamilnadu Ministers Rush to Delhi: நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவிக்கும் 100க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்கத் தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. முதலமைச்சர் உத்தரவின் பேரில் டெல்லி சென்ற 4 அமைச்சர்கள் நள்ளிரவில் ஆலோசனை நடத்தினர். மேலும், தமிழ்நாடு இல்லத்தின் கூடுதல் ஆணையர் தலைமையில் உயர்நிலைக் குழுவொன்று நேரடியாக நேபாள தலைநகர் காட்மண்டிற்கு விரைந்துள்ளது.
டெல்லி, ஆகஸ்ட் 28: அண்டை நாடான நேபாளத்தில் அண்மையில் எதிர்பாராத வகையில், பெரும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. குறிப்பாக அந்நாட்டின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போட்டே கோசி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அங்குள்ள பாலங்கள் மற்றும் சாலைகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. இந்த இயற்கை பேரிடரில் கைலாஷ் மானசரோவர் யாத்திரை மற்றும் சுற்றுலாவுக்காகத் தமிழ்நாட்டிலிருந்து நேபாளத்திற்குச் சென்ற 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களின் நிலவரத்தைக் கண்டறிந்து, அவர்களைப் பாதுகாப்பாகத் தாயகம் மீட்பதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, மீட்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: தமிழக அரசுப் பணிகளில் 20% இட ஒதுக்கீடு.. யாருக்கெல்லாம் தெரியுமா.. கவர்னர் காட்டிய பச்சைக் கொடி!
டெல்லி விரைந்த அமைச்சர்கள் குழு:
இம்மீட்புப் பணிகளை மத்திய அரசு மற்றும் நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் இணைந்து நேரடியாக ஒருங்கிணைப்பதற்காக, முதலமைச்சரின் உத்தரவின் பேரில் நான்கு அமைச்சர்கள் கொண்ட குழு டெல்லிக்கு விரைந்துள்ளது. அமைச்சர்கள் ஆத அர்ஜுனா, ராஜ்மோகன், தென்னரசு மற்றும் வினோத் ஆகியோர் அடங்கிய இந்தக் குழு டெல்லி சென்றடைந்ததும், நேற்று நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் டெல்லியிலுள்ள ‘தமிழ்நாடு இல்லத்தில்’ அவசர ஆலோசனைச் கூட்டத்தை நடத்தியது. இந்த ஆலோசனையில் டெல்லியில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
உயர்நிலை ஆலோசனைக் கூட்டம்:
இந்த உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தில், நேபாள வெள்ளத்தில் இதுவரை எத்தனை தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளார்கள், இன்னும் எத்தனை பேர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர், அவர்கள் தாயகம் திரும்பத் தயாராக உள்ளனரா மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், அங்கிருந்து பெறப்பட்ட வாட்ஸ்அப் குரல் பதிவுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கள நிலவரங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் அமைச்சர்கள் கேட்டறிந்தனர்.
24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை:
இத்துடன் கூடுதல் நடவடிக்கையாக, டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் கூடுதல் ஆணையர் ஆஷிஷ் குமார் தலைமையிலான மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை நேரடியாக நேபாள தலைநகர் காட்மண்டிற்கு அனுப்பத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இக்குழுவினர் காட்மண்ட் சென்றடைந்து, நேபாள அரசு மற்றும் இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் இணைந்து மீட்புப் பணிகளை நேரடியாக மேற்பார்வையிட உள்ளனர். மேலும், மாநிலத்தில் தவிக்கும் தமிழர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உடனடியாகத் தொடர்புகொள்ள ஏதுவாக 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறையும், அவசர உதவி எண்களும் தமிழ்நாடு அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுப் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
இதையும் படிக்க: கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலைய திட்டம்.. ஒரே நாளில் சரிந்த ரியல் எஸ்டேட் சந்தை!!
அமைச்சர்கள் குழு நேபாள் செல்ல ஆலோசனை:
நேபாளத்தில் நிலவும் இக்கட்டான சூழலைக் கருத்தில் கொண்டு, தேவைப்பட்டால் டெல்லியில் முகாமிட்டுள்ள அமைச்சர்கள் குழுவே நேரடியாக நேபாளத்திற்குப் பயணம் மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மீட்புக் குழுவினர் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் நிலச்சரிவில் சிக்கியவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டுவரும் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழர்களை விரைவாக தாயகம் அழைத்து வருவதற்கான அடுத்தகட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.