முதலமைச்சர் விஜய்யின் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்குகள்: இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை
தேர்தல் வழக்குகள் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தங்களுக்கு எதிரான தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, முதலமைச்சர் விஜய்யின் தேர்தல் வெற்றியை எதிர்த்து வாக்காளர் தினேஷ் தொடர்ந்த வழக்கும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் வெற்றியை எதிர்த்து சிவராஜ் தொடர்ந்த வழக்கும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
ஆகஸ்ட் 28, 2026: சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக முதலமைச்சர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றன. 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத் தலைவரும், தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்றார். பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து, அதற்கான கடிதத்தையும் சமர்ப்பித்தார்.
முதலமைச்சர் விஜய் வெற்றி எதிர்த்து வழக்கு:
இந்நிலையில், விஜய்யின் தேர்தல் வெற்றியை எதிர்த்து பெரம்பூர் தொகுதி வாக்காளர்களான லட்சுமி நரசிம்மன், தினேஷ் ஆகியோர் தேர்தல் வழக்கு தொடர்ந்தனர். அதேபோல், திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட இனிகோ இருதயராஜும் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
மேலும், வில்லிவாக்கம் தொகுதியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெற்றி பெற்றதை எதிர்த்து வாக்காளர் ஆர்.சிவராஜ் என்பவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும் படிக்க: ஒரே நிகழ்ச்சியில் மு.க ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்.. கைக்குலுக்கி நலம் விசாரித்த காட்சிகள்..
வழக்குகளை நிராகரிக்கக் கோரி மனு தாக்கல்:
இந்த வழக்குகளை நீதிபதி பி.லட்சுமி நாராயணன் விசாரித்து வருகிறார். இதற்கிடையே, தங்களுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரும் மனுக்களை ஆகஸ்ட் 27ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். தவறினால் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிட்டிருந்தார்.
மேலும் படிக்க: ‘தனித்தொகுதி’ என்ற சொல்லை மாற்றுக!.. சட்டமன்றத்தில் தவெக எம்எல்ஏ வைத்த முக்கிய கோரிக்கை!!
இதனிடையே, தேர்தல் வழக்குகள் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தங்களுக்கு எதிரான தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வழக்கு மீது இன்று விசாரணை:
இதையடுத்து, முதலமைச்சர் விஜய்யின் தேர்தல் வெற்றியை எதிர்த்து வாக்காளர் தினேஷ் தொடர்ந்த வழக்கும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் வெற்றியை எதிர்த்து சிவராஜ் தொடர்ந்த வழக்கும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
அதேநேரத்தில், முதலமைச்சர் விஜய்யின் வெற்றியை எதிர்த்து இனிகோ இருதயராஜ் மற்றும் லட்சுமி நரசிம்மன் ஆகியோர் தொடர்ந்த தேர்தல் வழக்குகள் ஆகஸ்ட் 31ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகள் மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.