Corona: கொரோனாவை எதிர்கொள்ள அரசு தயார்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு!
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. அமைச்சர் மா.சுப்பிரமணியன், தற்போதைய வைரஸ் பலவீனமானது எனவும், முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்றாலும் பொது இடங்களில் அணிவது நல்லது எனவும் தெரிவித்துள்ளார். அரசு போதிய ஆக்ஸிஜன் மற்றும் படுக்கைகள் தயார் நிலையில் வைத்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஈரோடு, ஜூன் 7: தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மக்கள் அச்சப்பட வேண்டாம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், “தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத பலவீனமான வகை வைரஸ் என கூறியுள்ளார். தமிழ்நாட்டில் பொதுமக்கள் முகக் கவசம் அணிவது கட்டாயம் இல்லை என தெரிவிக்கப்பட்டு இருந்தாலும் பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணிவது நல்ல விஷயமாகும். பரவி வரும் கொரோனா வைரஸ் கடுமையானது இல்லை, லேசானது என ஆய்வக பரிசோதனைகள் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொரோனா தொற்றை எதிர்கொள்ள அரசு முழு வீச்சில் தயாராக இருப்பதாகவும், நிலைமையை சமாளிக்க பொதுமக்களுக்கு உதவ தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.
நம்பிக்கையளித்த அமைச்சரின் பேச்சு
நாமக்கல்லில் ரூ 8.30 கோடி மதிப்பீட்டில் 13 இடங்களில் புதிய மருத்துவ கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, ரூ 2.96 கோடி மதிப்பீட்டில் 5 இடங்களில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவ கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டது… #Masubramanian #TNHealthminister #DMK4TN pic.twitter.com/5Q3o66aCY5
— Subramanian.Ma (@Subramanian_ma) June 7, 2025




மேலும் தமிழ்நாட்டில் 3000 மெட்ரிக் டன் அளவுக்கு போதுமான ஆக்ஸிஜன் சப்ளை உள்ளது எனவும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 9,400 படுக்கைகள் தயாராக இருக்கிறது எனவும் கூறினார்.
கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி
இப்படியான நிலையில் தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு மேலும் ஒரு நபர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கீழ்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் கடந்த 2025, ஜூன் 1 ஆம் தேதி கொரோனா அறிகுறிகள் இருந்ததால் சிதம்பரம் ராஜமுத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அது பலனளிக்காமல் உயிரிழந்தார். கிருஷ்ணமூர்த்தி கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் துக்க நிகழ்வில் கலந்து கொண்ட உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தற்போது அச்சத்தில் உள்ளனர். மீண்டும் தமிழகத்தில் பரவ தொடங்கியுள்ள கொரோனாவால் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே கிருஷ்ணமூர்த்திக்கு இணை நோய்கள் இருந்ததன் காரணமாக அவர் உயிரிழந்ததாக மாவட்ட சுகாதாரத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கொரோனாவின் தற்போதைய நிலை
கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டில் உலக நாடுகளை மிகப்பெரிய அளவில் அச்சுறுத்திய தொற்று நோயான கொரோனா பொருளாதார ரீதியாகவும், மனித ரீதியாகவும் மிகப் பெரிய இழப்புகளை ஏற்படுத்தியது. இப்படியான நிலையில் அந்த வைரஸ் உருமாற்றம் அடைந்து பரவி வந்த நிலையில் தற்போது அதன் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.
அதே சமயம் மாநில அரசுகளும் நோய் தொற்று தடுப்பு தொடர்பான நடவடிக்கைகளில் தீவிரமாக களமிறங்கி உள்ளது. இந்த நிலையில் 2025 ஜூன் 7ம் தேதி காலை 8 மணி நிலவரப்படி இந்தியாவில் 5755 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை இன்று புதிதாக 27 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், ஒருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.