இன்ஸ்டாகிராமில் பெண் இன்ஜினீயருக்கு பாலியல் தொல்லை.. பெங்களூர் வாலிபர் அதிரடி கைது!
Mettur Crime: சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பெண் இன்ஜினீயருக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் வாயிலாக ஆபாச புகைப்படங்கள் உள்ளிட்டவை அனுப்பி தொந்தரவு அளித்ததாக பெங்களூரில் சாப்ட்வேர் இன்ஜினீயராக பணி புரிந்து வரும் இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அம்மாசி கவுண்டர் நகரை சேர்ந்தவர் 33 வயதான பெண். இவர், சேலம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவருடன் கல்லூரியில் படித்த சக நண்பரான பிரசாந்த் என்பவர் பெங்களூருவில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இருவரும் கல்லூரி நண்பர்கள் என்பதால் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் ஆகியவற்றில் ஒருவரை ஒருவர் பின் தொடர்ந்து வருகின்றனர். இதனால், அவ்வப்போது இருவரும் நண்பர்களாக பேசி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், பிரசாந்தின் நடவடிக்கையில் சற்று மாற்றம் இருந்த காரணத்தால் அவரிடம் அந்த பெண் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், தன்னிடம் பேசுமாறு அந்த பெண்ணிடம் சாப்ட்வேர் இன்ஜினியர் பிரசாந்த் வற்புறுத்தி வந்ததாகவும் தெரிகிறது.
பேஸ் புக் – இன்ஸ்டாகிராமில் ஆபாச படங்கள் அனுப்பி தொந்தரவு
இந்த நிலையில், அந்தப் பெண்ணின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றுக்கு பிரசாந்த் ஆபாசமான தகவல் மற்றும் புகைப்படங்கள் அனுப்பி தொடர்ந்து தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்து அந்த பெண் கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர், பிரசாந்தின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதள பக்கங்களை அந்த பெண் பிளாக் செய்து உள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இன்ஜினியர் பிரசாந்த், அந்த பெண்ணை நேரில் பார்க்க முயற்சி செய்துள்ளார்.
மேலும் படிக்க: நடுநிலைமையை எனது தீர்ப்பு சொல்லும்.. அதிமுக விவகாரத்தில் அதிரடி காட்டிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்!




மேட்டூர் அனல்மின் நிலையத்தில் தகராறு
அதன்படி, கடந்த மே 21- ஆம் தேதி ( வியாழக்கிழமை) காலை மேட்டூர் அனல் மின் நிலைய அலுவலகத்திற்கு அந்த பெண்ணை பார்ப்பதற்காக சாஃப்ட்வேர் இன்ஜினியர் பிரசாந்த் சென்றுள்ளார். ஆனால், அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி உள்ளனர். ஆனால், அதையும் மீறி பிரசாந்த் அத்துமீறி அலுவலகத்துக்குள் நுழைந்துள்ளார். இதனால், அனல் மின் நிலையத்தில் பிரசாந்த் மற்றும் பாதுகாவலர்கள் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
சாஃப்ட்வேர் இன்ஜினியர் அதிரடி கைது
இதைத் தொடர்ந்து, பிரசாந்தை பாதுகாவலர்கள் அனல் மின் நிலையத்தை விட்டு வெளியே அனுப்பி வைத்தனர். பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பாக அந்தப் பெண் கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், சாஃப்ட்வேர் இன்ஜினியர் பிரசாந்த் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த பெண்ணுக்கு பிரசாந்த் பாலியல் தொந்தரவு அளித்தது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, பிரசாந்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க: சர்ச்சையான அந்த சிரிப்பு.. பின்னணி இதுதான்.. ஓப்பனாக பேசிய அமைச்சர் கீர்த்தனா!