சர்ச்சையான அந்த சிரிப்பு.. பின்னணி இதுதான்.. ஓப்பனாக பேசிய அமைச்சர் கீர்த்தனா!
Minister Keerthana : கோவை சிறுமி பாலியல் கொலை தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு சிரித்துக் கொண்டே பதில் அளித்தது சர்ச்சை ஆன நிலையில், அதற்கு அமைச்சர் கீர்த்தனா விளக்கம் அளித்துள்ளார். இதில், அவர் என்ன கூறினார் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக அமைச்சர் கீர்த்தனாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். அப்போது, அமைச்சர் கீர்த்தனா சிரித்துக்கொண்டு அதற்கு பதில் அளித்திருந்தார். அவர் சிரித்துக் கொண்டு பதில் அளித்தது பல்வேறு தரப்பினர் மத்தியில் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்தது. இது தொடர்பாக அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ தள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். இதில், நான் இயல்பாக சிரித்ததற்கும் எந்த கேள்விக்கும் அல்லது சம்பவத்திற்கும் எதிரான பிரதிபலிப்பு கிடையாது. உடல் மொழியை தவறாக புரிந்து கொண்டு அரசியல் நோக்கில் திரித்து பரப்பப்படுவது வருத்தம் அளிக்கிறது. கோயம்புத்தூரில் 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த இந்த கொடும் செயல் மிகுந்த வேதனை அளிக்கிறது.
சிறுமி கொலை வழக்கில் உரிய நடவடிக்கை
இந்த சம்பவத்தில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில், சுமார் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிறுமியின் வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள 250 கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகள் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், சம்பவம் நடந்த 24 மணி நேரத்துக்குள் ஒரு குற்றவாளி உட்பட அவருக்கு துணையாக இருந்தவர் என இருவர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் படிக்க: நடுநிலைமையை எனது தீர்ப்பு சொல்லும்.. அதிமுக விவகாரத்தில் அதிரடி காட்டிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்!




போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் மீது போக்சோ உள்ளிட்ட சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு உறுதி அளித்துள்ளது. ஒரு குழந்தைக்கான நீதியும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பும் தான் இந்த அரசின் முதல் முன்னுரிமை ஆகும். இத்தகைய உணர்வுப்பூர்வமான சூழ்நிலையிலும் அடிப்படை ஆதாரமற்ற விமர்சனங்கள் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் தேவையற்ற கேலிகள் நடைபெறுவது கவலைக்குரியதாக உள்ளது.
தனிப்பட்ட தருணத்தை ஆயுதமாக மாற்றுவது அழகல்ல
ஆளுங்கட்சியை எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம். ஆனால், உண்மைகளை திரித்து ஒருவரின் தனிப்பட்ட தருணங்களை அரசியல் ஆயுதமாக மாற்றுவது சமூகத்துக்கு ஆரோக்கியமான அணுகுமுறை கிடையாது. தமிழக அரசு மக்கள் பாதுகாப்பிலும், நீதியிலும் எந்த சமரசமும் செய்யாது என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். கோவை சிறுமி கொலை சம்பவம் தொடர்பான கேள்வியின்போது, அமைச்சர் கீர்த்தனா சிரித்ததாக சர்ச்சை எழுந்த நிலையில் இந்த விளக்கத்தை அவர் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: கோவை சிறுமி கொலை வழக்கு.. பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு முதலமைச்சர் விஜய் ஆறுதல்.. கடுமையான தண்டனை கிடைக்க உறுதி!