சிலிண்டர் தட்டுப்பாடு.. மத்திய அரசைக் கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்!!
Protests across Tamil Nadu: மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள் மற்றும் ஓசூர் விமான நிலையத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவது. மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் தமிழ் மொழியைப் புறக்கணிக்க முயல்வது. இப்படித் தொடர்ந்து தமிழகத்தைப் புறக்கணித்து வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசைக் கண்டித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, மார்ச் 14: நாடு முழுவதும் நிலவி வரும் சிலிண்டர் தட்டுப்பாடு விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து, நாளை (மார்ச் 15) தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது. மத்திய அரசின் தவறான வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஏற்பட்ட தோல்வியே, தற்போது நிலவி வரும் சமையல் மற்றும் வணிக ரீதியிலான எரிவாயு தட்டுப்பாட்டிற்கு முதன்மைக் காரணம் என குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் உணவகங்கள் மற்றும் சிறு-குறு தொழில்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கேஸ் சிலிண்டர் பற்றாக்குறை: தமிழகத்தில் திருமணங்கள் பாதிக்குமா? – வெளியான தகவல்
பிரதமருக்கு முதல்வர் கடிதம்:
இப்பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டுத் தீர்வு காணுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார். இருப்பினும், தற்போது வரை மக்களிடையே நிலவும் அச்சத்தை போக்கி நிலைமைய சீராக்கவோ, இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கவோ அல்லது உரிய நடவடிக்கை எடுக்கவோ மத்திய அரசு முன்வரவில்லை என்பது கண்டனத்திற்குரியது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகம் வஞ்சிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு:
எரிவாயு தட்டுப்பாடு ஒருபுறம் இருக்க, தமிழகத்தின் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசு பாராமுகமாக இருப்பதாகக் கூட்டணி கட்சிகள் சாடியுள்ளன. கல்வி நிதி, 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதி மற்றும் குடிநீர் இணைப்புத் திட்டங்களுக்கான நிதியை நிறுத்தி வைத்திருப்பது. மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள் மற்றும் ஓசூர் விமான நிலையத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவது. மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் தமிழ் மொழியைப் புறக்கணிக்க முயல்வது. இப்படித் தொடர்ந்து தமிழகத்தைப் புறக்கணித்து வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசைக் கண்டித்தே இந்தப் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மானாமதுரையில் கைதி லாக் அப் டெத்… 6 போலீசார் மீது பாய்ந்த நடவடிக்கை… டிஐஜி சரவணன் அதிரடி உத்தரவு!
தமிழகம் முழுவதும் நாளை போராட்டம்:
அதன்படி, நாளை (மார்ச் 15) காலை 10.30 மணியளவில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஒன்றிய, நகர, பகுதி மற்றும் பேரூர்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மதச்சார்பற்ற கூட்டணியை சேர்ந்த அனைத்து அணி நிர்வாகிகள், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்று மத்திய அரசின் வஞ்சகப் போக்கிற்கு எதிராகத் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்யும் வகையில் உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.