Local Holiday: ஜூன் 6ல் சென்னையில் 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதரேஸ்வரர் கோயிலின் ஆண்டுத் திருவிழாவின் ஒரு பகுதியாக ஜூன் 6, 2025 அன்று திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள 7 பள்ளிகளுக்கு ஜூன் 6 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் இந்த உத்தரவை வெளியிட்டுள்ளார்.

சென்னை, ஜூன் 5: சென்னை (Chennai) புரசைவாக்கத்தில் செயல்படும் கங்காதரேஸ்வரர் கோயில் திருத்தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் நாளை (2025, ஜூன் 6) அப்பகுதியில் செயல்படும் 7 பள்ளிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை (Local Holiday) விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பில், சென்னை மாவட்டத்தில் உள்ள புரசைவாக்கம் வட்டத்தில் அமைந்திருக்கும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் அருள்மிகு கங்காதரேஸ்வரர் திருக்கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவ பெருவிழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக 2025 ஜூன் 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வரலாற்றில் முதல் முறையாக இந்த திருக்கோயிலில் புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட அம்பாள் மரத்தேர் ஆகிய இரண்டு திருத்தேர்கள் கொண்ட தேரோட்ட விழா நடைபெற உள்ளது.
எந்த 7 பள்ளிகள் தெரியுமா?
இதனை முன்னிட்டு அன்று மட்டும் கங்காதரேஸ்வரர் கோயில் அமைந்திருக்கும் பகுதியை சுற்றியுள்ள கீழ்காணும் பள்ளிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி ரஷ்மி சித்தார்த் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறைக்கு பதிலாக வரும் ஜூன் 21, 2025 சனிக்கிழமை அன்று கீழ்காணும் பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கங்காதரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளி, இஎல்எம் (ELM) ஸ்கூல், எம்சிடிஎம் (MCTM) ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, எம்சிடிஎம் (MCTM) பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அழகப்பா மேல்நிலைப்பள்ளி எவர்ட்ஸ் (Evards) ஸ்கூல், சென்னை மாநகராட்சி பள்ளி வெள்ளாள தெரு ஆகிய பள்ளிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையால் இப்பள்ளிகளில் பயிலும் 4200 மாணவர்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.




இங்கேயும் நாளை (ஜூன் 6) விடுமுறை
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 2025 ஜூன் 5 மற்றும் ஜூன் 6 ஆகிய தொடர் விடுமுறை மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நாட்களும் அந்த மாவட்டத்தில் செயல்படும் அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. காரைக்காலில் உள்ள கைலாசநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நாட்கள் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 2025 ஜூன் மாதம் 14ஆம் தேதி மற்றும் 21ஆம் தேதி வரும் சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 5-ம் தேதி கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் ஜூன் 6ஆம் தேதி திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் கோயிலில் தேரோட்டம் திருவிழா நடைபெறுகிறது. இந்த இரண்டு நிகழ்விலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.