அனிதா நினைவேந்தலுக்கு ஏன் அனுமதி இல்லை? உதயநிதி – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இடையே விவாதம்..
TN Assembly: செப்டம்பர் 1ஆம் தேதியான இன்று சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு மற்றும் அனிதாவின் குடும்பத்தினர் சார்பில் அமைதியான முறையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவதற்கு ஏன் அனுமதி வழங்கப்படவில்லை என கேள்வி எழுப்பினார்.
செப்டம்பர் 1, 2026: அனிதா நினைவேந்தல் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன் என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதில் அளித்தார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது. ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
அனிதா நினைவேந்தல் கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு ஏன்?
இந்த நிலையில், செப்டம்பர் 1ஆம் தேதியான இன்று சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு மற்றும் அனிதாவின் குடும்பத்தினர் சார்பில் அமைதியான முறையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவதற்கு ஏன் அனுமதி வழங்கப்படவில்லை என கேள்வி எழுப்பினார்.
மேலும் படிக்க: மதுரையில் மாணவி தற்கொலை விவகாரம்.. தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்.. கல்வித்துறையில் பரபரப்பு!
பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய கொடியேற்றம் ஏற்கனவே நிறைவடைந்துவிட்ட நிலையில், ஜனநாயக முறையில் அமைதியாக நடைபெற இருந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அரசு அனுமதி மறுத்தது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும், மாதா கோவில் கொடியேற்றத்தை காரணம் காட்டி அனிதாவின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அந்தப் பகுதியில் பெரிய அளவில் கூட்டம் கூடவில்லை என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
“உடனடியாக நினைவேந்தல் கூட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும். இல்லையெனில், நிகழ்ச்சியை நடத்துவதற்கு மாற்று இடத்தையாவது அரசு தேர்வு செய்து வழங்க வேண்டும். அனிதாவின் மரணத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை” என அவர் தெரிவித்தார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கொடுத்த விளக்கம்:
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை கருத்தில் கொண்டே நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்தார். இதில் எந்தவித அரசியலும் இல்லை என்றும், நினைவேந்தல் கூட்டத்தை நடத்துவதற்கு ஏதுவான மாற்று இடத்தை தேர்வு செய்ய அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
மேலும், இன்று தங்கை அனிதாவின் நினைவு நாள் என்றும், நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய அனிதா, தனது கோரிக்கை நிறைவேறாததால் உயிரிழந்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
நீட் தேர்வுக்கு எதிராக மூன்று மாநில முதலமைச்சர்கள் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகவும், எதிர்காலத்தில் அரசியல் சூழல் மாறும்போது அந்த தீர்மானங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இன்றாவது அரசியல் செய்ய வேண்டாம் – கடுப்பான திமுகவினர்:
“சட்டமன்றத்தில் ஒலித்த குரல் நாடாளுமன்றத்திலும் ஒலிக்கும். நீட் தூக்கி எறியப்படும் நாளாக அது மாறும். அனிதாவின் தியாகத்திற்கான நியாயம் நிறைவேறும். கடைசியாக, அனிதாவின் நினைவு நாளான இன்றாவது அரசியல் செய்ய வேண்டாம்” என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். அமைச்சரின் இந்தக் கருத்துக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.