கரூர் சம்பவம்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் சர்ச்சை பேச்சு.. திமுக எடுத்த திடீர் முடிவு!!
திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் பல்வேறு முக்கிய அம்சங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. அதன்படி, சிபிஐ விசாரணை நிலுவையில் இருப்பதால், தமிழக முதல்வர் ஜோசப் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் அல்லது இந்த வழக்கில் தொடர்புடைய நபர்கள் யாரும் எதிர்கட்சிகளைக் குற்றம்சாட்டியோ, அச்சுறுத்தும் வகையிலோ பொதுவெளியில் பேசக் கூடாது.
சென்னை, ஜூலை 03: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய இடையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்பு சம்பவம் தொடர்பான வழக்கு தற்போது சிபிஐ விசாரணையில் உள்ளது. இந்தச் சூழ்நிலையில், தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேற்று இதுகுறித்து சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துக்களைப் பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்தே திமுக இந்த அதிரடி சட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இதையும் படிக்க: முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு.. திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது.. உச்சக்கட்ட பரபரப்பு!!
இடையீட்டு மனுவின் முக்கிய கோரிக்கைகள்:
திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் பல்வேறு முக்கிய அம்சங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. அதன்படி, சிபிஐ விசாரணை நிலுவையில் இருப்பதால், தமிழக முதல்வர் ஜோசப் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் அல்லது இந்த வழக்கில் தொடர்புடைய நபர்கள் யாரும் எதிர்கட்சிகளைக் குற்றம்சாட்டியோ, அச்சுறுத்தும் வகையிலோ பொதுவெளியில் பேசக் கூடாது. சுதந்திரமான விசாரணையைப் பாதிக்கும் வகையில் எவ்வித கருத்துக்களையும் வெளியிட நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்.
நீதிமன்ற கண்காணிப்பில் நிதியுதவி:
இந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு நிதியுதவி மற்றும் நலத்திட்டங்களை வழங்க மாநில அரசுக்கு உரிமை உண்டு. எனினும், சிபிஐ விசாரணையின் நேர்மைத் தன்மையும், சாட்சிகளின் பாதுகாப்பும் பாதிக்கப்படாத வண்ணம், இந்த உதவிகள் அனைத்தும் நீதிமன்ற கண்காணிப்பின் கீழேயே வழங்கப்பட வேண்டும். அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் தற்போதைய கருத்துக்கள் சாட்சிகளை கலைக்கும் வகையிலும், விசாரணைக்கு முட்டுக்கட்டை போடும் வகையிலும் அமைந்திருப்பதால், அவருக்கு எதிராக சிபிஐ புகார் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
அரசியல் பரபரப்பு:
கரூர் சம்பவத்தின் நியாயமான, சுதந்திரமான மற்றும் நேர்மையான விசாரணையைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என திமுக கோரியுள்ளது. இந்த இடையீட்டு மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழக அரசியல் வட்டாரத்தில் இந்த விவகாரம் மேலும் சூடுபிடித்துள்ளது.
கரூரில் சில கணக்கு வழக்கு:
முன்னதாக, விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணையும் விழா சென்னையில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றதுத. இந்த விழாவில் பேசும்போது கரூரைப் பற்றிக் குறிப்பிட்ட ஆதவ் அர்ஜுனா, “எனக்கு கரூர் மிக முக்கியமான ஊர், அங்கு சில கணக்கு வழக்குகள் உள்ளன. அதை முடிக்காமல் விடமாட்டோம்” என்று ஆவேசமாகப் பேசினார். திமுக அரசு காவல்துறையைப் பயன்படுத்தி தவெக தொண்டர்கள் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்ததாகவும், செந்தில் பாலாஜியின் ‘கரூர் கம்பெனி’ ரவுடிசத்தாலும், பணத்தாலும் கரூரைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் சாடினார்.
மேலும் படிக்க: “முதல்வர் விஜய் கரூர் செல்வதற்குள் செந்தில் பாலாஜியை கைது செய்ய சதி”.. முன்னாள் அமைச்சர் ரகுபதி பகீர் குற்றச்சாட்டு!!
அதோடு, எங்கள் தலைவர் மீதும், எங்கள் கரூர் மக்கள் மீதும் நீங்கள் கை வைத்து விட்டீர்கள். உதயநிதியின் வாழ்க்கைக்காக எங்களுடைய மக்களை காவல்துறை மூலமாக கொன்று குவித்தீர்கள். அதற்கான பதில் ஒரு நேரத்தில் கண்டிப்பாக கிடைக்கும், சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்தார்.