விமான பயணிகளே.. அபுதாபிக்கு இனி மதுரையில் இருந்தும் செல்லலாம்…
New Direct Flights: மதுரை விமான நிலையத்திலிருந்து அபுதாபிக்கு இண்டிகோ விமான நிறுவனம் புதிய நேரடி விமான சேவையைத் தொடங்கியுள்ளது. ஜூன் 13, 2025 அன்று தொடங்கிய இந்த சேவை, திங்கள், புதன், வெள்ளி நாட்களில் இயக்கப்படும். முதல் நாளில் 134 பயணிகள் அபுதாபியிலிருந்தும், 174 பயணிகள் மதுரையிலிருந்தும் பயணித்தனர்.

மதுரை ஜூன் 14: மதுரை விமான நிலையத்திலிருந்து (Madurai International Airport) அபுதாபிக்கு 2025 ஜூன் 13 ஆம் தேதி அன்று முதல் நேரடி விமான சேவை (Direct flight service from Madurai airport to Abu Dhabi) தொடங்கப்பட்டுள்ளது. முதல் நாளில் அபுதாபியிலிருந்து 134 பயணிகளுடன் விமானம் மதுரை வந்தது; பின்னர் மதுரையிலிருந்து 174 பயணிகள் அபுதாபி புறப்பட்டனர். இதுவரை இலங்கை மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு மட்டுமே விமான சேவை இருந்தது. இண்டிகோ நிறுவனம் (Indigo Company) மூன்றாவது வெளிநாட்டு சேவையாக இந்தப் பயணத்தை தொடங்கியுள்ளது. இந்த சேவை வாரத்தில் மூன்று நாட்கள் (திங்கள், புதன், வெள்ளி) நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து காரணமாக வழக்கமான வரவேற்பு நிகழ்ச்சி தவிர்க்கப்பட்டது.
மதுரை விமான நிலையத்திலிருந்து அபுதாபிக்கான நேரடி விமான சேவை
டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட செய்தியின் படி, மதுரை விமான நிலையத்திலிருந்து அபுதாபிக்கான நேரடி விமான சேவை 2025 ஜூன் 13 வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியது. இவ்வரிசையில், முதல் விமானம் அபுதாபியிலிருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.15 மணிக்கு மதுரை வந்தடைந்தது. இந்த விமானத்தில் 134 பயணிகள் வந்தனர். பின்னர், மதுரையிலிருந்து நண்பகல் 2.48 மணிக்கு புறப்பட்ட விமானத்தில் 174 பயணிகள் அபுதாபிக்கு பயணித்தனர்.
இலங்கை, துபாய்க்கு மட்டுமே பயணிகள் விமான சேவை இருந்தது
இதுவரை மதுரை விமான நிலையத்தில் இலங்கை மற்றும் துபாய் ஆகிய இரு வெளிநாடுகளுக்கு மட்டுமே பயணிகள் விமான சேவைகள் இயங்கிவந்தன. இந்நிலையில், தனியார் நிறுவனமான இண்டிகோ நிறுவனம் மூன்றாவது வெளிநாட்டு சேவையாக அபுதாபிக்கான பயணத்தை தொடங்கியுள்ளது.




விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததாவது, இந்த சேவை திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் நடைபெறும். பயணிகளின் தேவைக்கேற்ப, அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறினர்.
அகமதாபாத் விமான விபத்தில் 240 பேர் உயிரிழப்பு
அகமதாபாத், ஜூன் 12: குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் (AI-171) பயங்கர விபத்திற்கு உள்ளானது. போயிங் 787-8 ட்ரீம் லைனர் வகை இந்த விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இயந்திர கோளாறு காரணமாக கீழே விழுந்து தரையில் மோதி வெடித்து எரிந்தது. விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதில் 230 பயணிகள், 2 விமானிகள் மற்றும் 10 விமான பணியாளர்கள் அடங்குவர். இந்த பயணத்தில் இருந்த ஒரே உயிர் பிழைத்த நபராக ஒரு பிரிட்டிஷ் பயணி விஸ்வாஸ் குமார் ரமேஷ், அவசர வெளியேறும் கதவின் அருகில் இருந்ததினால் தப்பினார்.
“வாட்டர் சால்யூட்” நிகழ்ச்சி நடத்தப்படவில்லை
பொதுவாக புதிய விமான சேவையை வரவேற்க விமான நிலையத்தில் “வாட்டர் சால்யூட்” நிகழ்ச்சி நடப்பது வழக்கம். எனினும், அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து சம்பவத்தால், இந்த புதிய சேவைக்கான வரவேற்பு நிகழ்ச்சிகள் மதுரை விமான நிலையத்தில் தவிர்க்கப்பட்டன.