“புக் செய்த 4 மணி நேரத்தில் சிலிண்டர் டெலிவரி!”.. சென்னை மக்களுக்கு குட் நியூஸ்!!
Indane XtraLite Cylinder: சமையல் எரிவாயு சிலிண்டர் புக் செய்த வெறும் 4 மணி நேரத்திற்குள் வீடு தேடி டெலிவரி செய்யும் புதிய சேவையை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 'இன்டேன் எக்ஸ்ட்ரா லைட்' (Indane XtraLite) என்ற 10 கிலோ எடைகொண்ட இந்த ஃபைபர் சிலிண்டரில் எரிவாயு அளவை வெளியிலிருந்தே பார்க்கும் வசதியும் உள்ளது. சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இச்சேவை கிடைக்கிறது.
சென்னை, செப்.03: சமீபகாலமாக வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெறுவதில் பொதுமக்கள் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களைச் சந்தித்து வந்தனர். சிலிண்டர் முன்பதிவு செய்வதில் ஏற்படும் தொழில் நுட்பக் கோளாறுகள், புக் செய்த பிறகும் டெலிவரிக்கு 3 முதல் 4 நாட்கள் வரை நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் எனப் பல்வேறு சிரமங்கள் நீடித்து வந்தன. மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாகச் சர்வதேச அளவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சமும், அதனால் விநியோகத்தில் தாமதமும் உருவாகின. இத்தகைய சூழலில், பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், சிலிண்டர் புக் செய்த வெறும் 4 மணி நேரத்திற்குள் வீடு தேடி விநியோகம் செய்யும் அதிவேகச் சேவையை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: புனித ஜார்ஜ் கோட்டைக்கு ‘குட்-பை’.. ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம்.. முதல்வர் விஜய் அறிவிப்பு!!
10 கிலோ எடை கொண்ட புதிய சிலிண்டர்:
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில், கடந்த ஜூலை மாதம் ‘இன்டேன் எக்ஸ்ட்ரா லைட்’ என்ற அதிநவீன புதிய வகை சிலிண்டரை சந்தையில் அறிமுகப்படுத்தியது. இந்த எக்ஸ்ட்ரா லைட் சிலிண்டரானது 10 கிலோ எடை கொண்டதாகும். வழக்கமாக நாம் பயன்படுத்தும் கனமான இரும்பு சிலிண்டர்களுக்கு மாற்றாக, இது சிறப்பு வகை பிளாஸ்டிக் மற்றும் ஃபைபர் கூட்டுப் பொருட்களால் மிகக் குறைந்த எடையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த உருளையின் மிக முக்கிய சிறப்பம்சம் என்னவெனில், இது ஒளி ஊடுருவும் தன்மையுடையது. இதனால் சிலிண்டருக்குள் இன்னும் எவ்வளவு கேஸ் மீதம் உள்ளது என்பதைப் பயனாளர்கள் வெளியிலிருந்தே நேரடியாகப் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியும்.
ரூ.3,000 வைப்புத் தொகை செலுத்த வேண்டும்:
ஏற்கெனவே இன்டேன் கேஸ் இணைப்பு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், தங்களின் அதே இணைப்பின் கீழ் மானியம் இல்லாத பிரிவில் இந்த 10 கிலோ ‘எக்ஸ்ட்ரா லைட்’ சிலிண்டரைப் பெற்றுக்கொள்ளலாம். இப்புதிய சிலிண்டரைப் பெற ரூ.3,000 வைப்புத் தொகையாகச் செலுத்த வேண்டும். ஏற்கெனவே பழைய சிலிண்டருக்கு வைப்புத் தொகை செலுத்தியுள்ள வாடிக்கையாளர்கள், அதற்கான தொகையைக் கழித்துவிட்டு மீதமுள்ள கட்டணத்தை மட்டும் செலுத்தி இச்சேவைக்கு மாறிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: விளையாட்டுத் துறையில் புதிய மைல்கல்!.. ‘ஒலிம்பிக் நகரம்’ முதல் ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி’ வரை.. அச்சத்தல் அறிவிப்புகள்!!
சென்னையிலும் 10 கிலோ சிலிண்டர் அறிமுகம்:
தொடக்கத்தில் கோயம்புத்தூர் உள்ளிட்ட நாட்டின் ஒருசில முக்கிய நகரங்களில் மட்டும் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம், தற்போது சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, திருப்பூர், மதுரை ஆகிய மாவட்டங்களுக்கும், புதுச்சேரி மாநிலத்திற்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் பொதுமக்கள் 10 கிலோ இன்டேன் எக்ஸ்ட்ரா லைட் சிலிண்டரைப் புக் செய்த வெறும் 4 மணி நேரத்திற்குள் விரைவாகப் பெற்றுக்கொள்ள முடியும். இச்சேவை வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.