கொளத்தூர் தொகுதி வெற்றி.. மு.க ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்..
இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி, தேர்தல் முடிவுகள் வெளியான 3 நாட்களிலேயே, அதாவது மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்க விண்ணப்பித்ததாக வாதிட்டார். இந்நிலையில் இன்றைய விசாரணையில் வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்
செப்டம்பர் 3, 2026: சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரியும், தொகுதியில் பதிவான 100 சதவீத வாக்குகளுக்கான விவிபேட் இயந்திரங்களை எண்ண உத்தரவிடக் கோரியும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
வழக்கு பின்னணி என்ன?
2026ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதில் இரண்டாவது இடத்தைப் பிடித்த மு.க.ஸ்டாலின், வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
முன்னதாக, ஸ்டாலின் தரப்பில் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் கொளத்தூர் தொகுதியில் 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய விவிபேட் இயந்திரங்கள் சரிபார்ப்புக்கு உட்படுத்தப்பட்டன.’
மேலும் படிக்க: புனித ஜார்ஜ் கோட்டைக்கு ‘குட்-பை’.. ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம்.. முதல்வர் விஜய் அறிவிப்பு!!
வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட குளறுபடி:
சரிபார்ப்பின்போது சில வாக்குப்பதிவு இயந்திரங்கள் திடீரென கோளாறாகி செயலிழந்ததாகவும், 6 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுக்கும், விவிபேட் இயந்திரங்களில் பதிவான ஒப்புகைச் சீட்டுகளுக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பதாகவும் ஸ்டாலின் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
இதனால், கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களையும் சரிபார்க்க உத்தரவிட வேண்டும் என்றும், வி.எஸ்.பாபுவின் வெற்றியை செல்லாது என அறிவித்து தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது.
வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு:
இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி, தேர்தல் முடிவுகள் வெளியான 3 நாட்களிலேயே, அதாவது மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்க விண்ணப்பித்ததாக வாதிட்டார்.
மேலும் படிக்க: பிறப்புறுப்பில் மிளகாய் பொடி, பபுள்கம்.. 8ஆம் வகுப்பு மாணவருக்கு சக மாணவர்கள் பாலியல் துன்புறுத்தல்.. 9 பேர் கைது..
ஆனால், தேர்தல் ஆணையம் தரப்பில், எம்.எல்.ஏ.வின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரும் கோரிக்கையை தேர்தல் வழக்கு மூலமாக மட்டுமே முன்வைக்க முடியும் என்றும், தற்போதைய மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி, அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.