விளையாட்டுத் துறையில் புதிய மைல்கல்!.. ‘ஒலிம்பிக் நகரம்’ முதல் ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி’ வரை.. அச்சத்தல் அறிவிப்புகள்!!
CM Vijay Assembly Speech: தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களைக் குவிக்க சென்னையில் உலகத்தரத்தில் 'தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்' மற்றும் சர்வதேச பந்தயங்களை நடத்த 'மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்' அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் வரலாற்றுச் சிறப்புமிக்க இரு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
சென்னை, செப்.03: தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களை சர்வதேச அளவில் முதன்மை நிலைக்கு உயர்த்துவதையும், மாநிலத்தை உலகளாவிய விளையாட்டு மையமாக மாற்றுவதையும் இலக்காகக் கொண்டு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் இரு பிரம்மாண்டமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, 110 விதியின் கீழ் அவையில் அவர் வெளியிட்ட அறிவிப்பால், சர்வதேசப் போட்டிகளில் தமிழக வீரர்கள் அதிக அளவில் பதக்கங்களை வெல்வதற்கும், மோட்டார் வாகன பந்தயத் துறையில் உள்ள சர்வதேச வாய்ப்புகளைப் பயன்படுத்தி விளையாட்டுச் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் இத்திட்டங்கள் அடித்தளமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: புனித ஜார்ஜ் கோட்டைக்கு ‘குட்-பை’.. ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம்.. முதல்வர் விஜய் அறிவிப்பு!!
தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்:
தமிழகத்தைச் சேர்ந்த திறமைமிக்க விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகள் உள்ளிட்ட உலகின் மிக உயரிய விளையாட்டு மேடைகளில் தங்களின் திறமையை நிரூபித்து, அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களைக் கைப்பற்றுவதை உறுதி செய்யும் வகையில், சென்னைக்கு அருகில் உலகத்தரத்திலான ‘தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்’ அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் உருவாக்கப்படவுள்ள இந்த ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகத்தில், சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கங்கள், அதிநவீனப் பயிற்சி உபகரணங்கள், உயர்தர செயல்திறன் பயிற்சி மையம், விளையாட்டு அறிவியல் மற்றும் மருத்துவ மையங்கள் ஆகியவை அமையவுள்ளன. மேலும், உலகளாவிய பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள் தங்கிப் பயிற்சி பெறத் தேவையான அனைத்து நவீன தங்குமிட உள்கட்டமைப்புகளும் இதில் இடம்பெறும்.
மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்:
இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் வாகன உற்பத்தியிலும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பிலும் முன்னணியில் திகழும் தமிழ்நாட்டை, சர்வதேச பந்தயங்களின் முக்கிய மையமாக மாற்றும் வகையில் ஒரு புதிய ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்’ உருவாக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார். தற்போது சென்னை இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட் மற்றும் கோவையில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வே ஆகிய தடங்களில் தேசிய அளவிலான எஃப்3, எஃப்4 (F3, F4) கார் பந்தயங்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வரும் நிலையில், புதிதாக அமையவுள்ள இந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரில் ஃபார்முலா 1, ஃபார்முலா 2, ஃபார்முலா 3 மற்றும் ஃபார்முலா 4 போன்ற உலகப் புகழ்பெற்ற சர்வதேச பந்தயங்களை நடத்தும் வகையிலான பந்தயத்தடங்கள் அமைக்கப்படவுள்ளன.
இதையும் படிக்க: டாஸ்மாக் கடைகளில் ரூ.10 கூடுதல் வசூல்.. ஒரே நாளில் 67 ஊழியர்கள் சஸ்பெண்ட்.. அமைச்சர் அதிரடி!
விளையாட்டுச் சுற்றுலா வளர்ச்சி:
இந்த அதிநவீன மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் பந்தயங்களுக்கான இடமாக மட்டுமின்றி, சர்வதேச பந்தயக் கார்களுக்கான உற்பத்தி ஆலைகள், அதற்கான உதிரிபாகத் தொழிற்சாலைகள் மற்றும் சிறப்புப் பயிற்சி மையங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். இதன் மூலம் மாநிலத்தின் விளையாட்டுச் சுற்றுலா பெருமளவில் வளர்ச்சியடைவதுடன், மோட்டார் வாகனப் பந்தயங்களில் ஆர்வமுள்ள தமிழக இளைஞர்களுக்குச் சர்வதேச அளவிலான பயிற்சிகளும், புதிய வேலைவாய்ப்புகளும் தடையின்றி கிடைக்கும். இத்தகைய ஒருங்கிணைந்த திட்டங்கள் மூலம் தமிழ்நாடு விளையாட்டுத் துறையிலும், பொருளாதார வளர்ச்சியிலும் ஒரு புதிய மைல்கல்லை எட்டும் என்று முதல்வர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.