துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம்.. தேர்தல் முடிவுக்கு பின் சரிபார்க்கப்படும் – வருமான வரித்துறை..
தேர்தல் முடிவுகள் வெளியான பின், வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து விவரங்களை வருமான வரித்துறை தாமாக முன்வந்து சரிபார்க்கும் நடைமுறையை தொடங்க வேண்டும். மேலும், 150 நாட்களுக்குள் சரிபார்ப்பு பணிகளை முடிக்க வேண்டும் எனவும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில் அளித்துள்ளது.
சென்னை, ஏப்ரல் 25, 2026: தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஸ்டாலினின் வேட்புமனு சொத்து மதிப்பு விவரங்களில் முரண்பாடு உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் முடிவுக்கு பின் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் தாமாக முன்வந்து சரிபார்க்கப்படும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன என வருமான வரித்துறை, சென்னை உயர்நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு தொடர்பான வழக்கு:
சென்னை சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி தொகுதியில், துணை முதலமைச்சரும் திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் உள்ள சொத்து விவரங்களும், அவர் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது தாக்கல் செய்த சொத்து மதிப்பு விவரங்களும் முரண்பாடுகள் உள்ளதாகக் கூறி, ஆர். குமரவேல் என்றவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மேலும் படிக்க: தமிழ்நாட்டில் 85% வாக்குப்பதிவு ஒரு மைல்கல்லா?.. புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தும் உண்மைப் பின்னணி!
இந்த வழக்கில், வருமான வரித்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களின் போது வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் வேட்புமனுக்களில் குறிப்பிடப்படும் சொத்து விவரங்களை சரிபார்க்க, மத்திய நேரடி வரிகள் வாரியம் 2019ஆம் ஆண்டு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
வருமான வரித்துறை தாக்கல் செய்த பதில்:
அதன்படி, தேர்தல் முடிவுகள் வெளியான பின், வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து விவரங்களை வருமான வரித்துறை தாமாக முன்வந்து சரிபார்க்கும் நடைமுறையை தொடங்க வேண்டும். மேலும், 150 நாட்களுக்குள் சரிபார்ப்பு பணிகளை முடிக்க வேண்டும் எனவும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கொளுத்தும் வெயில்.. உள் தமிழகத்தில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்கும் என எச்சரிக்கை..
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடர்பான சொத்து விவரங்களைப் பொருத்தவரை, விரிவான ஆய்வு மேற்கொள்ளாமல் 2021 மற்றும் 2026 ஆண்டுகளின் சொத்து மதிப்புகளை ஒப்பிட்டு பார்க்க முடியாது. மேலும், அவரது நிதி தொடர்பான ஆவணங்கள் தற்போது வருமான வரித்துறை வசம் இல்லை. தற்போதைய நிலையில் எளிமையாக முடிவு எடுக்க முடியாததால், ஆவணங்களை ஆய்வு செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை ஜூன் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.