தமிழ்நாட்டில் 85% வாக்குப்பதிவு ஒரு மைல்கல்லா?.. புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தும் உண்மைப் பின்னணி!
Tamil Nadu Assembly Election 2026: இதுவரை வாக்குச்சாவடி பக்கமே வராத வாக்காளர்கள் கூட இந்த முறை பெருமளவில் வந்து வாக்களித்துள்ளதாக விஜய் குறிப்பிட்டுள்ளார். மேலும், மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து வாக்களித்தது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு சிகரமான நிகழ்வு என்றும் அவர் பாராட்டியுள்ளார்.
Tamil Nadu Election Poll Percentage: நடந்து முடிந்த 2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், மாநில வரலாற்றிலேயே இல்லாத வகையில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை கண்டிராத வகையில் 85.15% வாக்குகள் பதிவாகி சாதனை படைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அதீத வாக்குப்பதிவு சதவீதம் குறித்த அரசியல் ரீதியான பார்வைகளையும், அதன் பின்னணியில் உள்ள தொழில்நுட்பக் காரணங்களையும் கீழே விரிவாகக் காணலாம்.
இதையும் படிக்க: எதிர்க்கட்சி வாக்குகள் சிதறினால் என்னவாகும்?.. தமிழக அரசியல் வரலாறு சொல்லும் இரு முக்கியப் பாடங்கள்..
அரசியல் தலைவர்களின் வரவேற்பு:
இந்த வரலாற்றுச் சாதனை குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது சமூக வலைதளப் பதிவில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். “இதுவரை ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் வாக்குச்சாவடி பக்கமே வராமல் இருந்தனர். ஆனால் இந்த முறை, தமிழக மக்கள் குடும்பம் குடும்பமாக, குழந்தைகளுடன் வந்து திருவிழா போல வாக்களித்துள்ளனர். இது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு சிகரமான நிகழ்வு” என அவர் பாராட்டியுள்ளார்.
கடந்த 25 ஆண்டுகால தேர்தல் தரவுகள்:
சமூக வலைதளங்களில் இந்த வாக்கு சதவீத உயர்வு பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் கடந்த காலத் தரவுகளை ஆய்வு செய்யும் போது சில முக்கியத் தகவல்கள் கிடைக்கின்றன. அதன்படி, 2021 தேர்தலில் 4 கோடியே 58 லட்சம் பேர் வாக்களித்தனர். 2026 தேர்தலில் 4 கோடியே 88 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக கடந்த முறையை விட இந்த முறை 30 லட்சம் வாக்குகள் அதிகம் பதிவாகியுள்ளது.
வரலாற்று ரீதியான வளர்ச்சி (1996 – 2026):
கடந்த 25 ஆண்டுகாலத் தரவுகளைப் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்காளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் காண முடிகிறது. 1996-ல் 2.71 கோடி வாக்குகளாக இருந்தது, 2001-ல் 2.80 கோடியாக உயர்ந்தது. 2006-ல் அதற்கு முந்தைய தேர்தலை விட 50 லட்சம் வாக்குகள் அதிகரித்தது. 2016 தேர்தலில் மிக அதிகபட்சமாக 64 லட்சம் வாக்குகள் கூடுதலாகப் பதிவானது. தற்போது பதிவாகியுள்ள 30 லட்சம் கூடுதல் வாக்குகள் என்பது, “இயல்பான வளர்ச்சி” போலவே காட்சியளிக்கிறது. குறிப்பாக, இந்தத் தரவுகளின்படி பார்த்தால், இந்த முறை பதிவான 30 லட்சம் கூடுதல் வாக்குகள் என்பது கடந்த கால சராசரி வளர்ச்சியே தவிர, இது ஒரு அசாதாரணமான உயர்வு அல்ல என்பது தெளிவாகிறது.
85% வாக்கு சதவீதம் – மாயமா? உண்மையா?
பதிவான வாக்குகளின் எண்ணிக்கை (30 லட்சம்) பெரிய அளவில் மாற்றம் அடையாத போது, ‘வாக்கு சதவீதம்’ மட்டும் எப்படி 85.15% என உயர்ந்தது என்ற கேள்வி எழுகிறது. இதற்கான முக்கியமான காரணம் இதுதான். வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி (SIR). இந்தத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் ஆணையம் மேற்கொண்ட தூய்மைப்பணிகளின் காரணமாக, சுமார் 74.07 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. போலி வாக்காளர்கள், இறந்தவர்கள் மற்றும் இடம்பெயர்ந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதால், ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்தது.
இதையும் படிக்க: தமிழகத் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘பெண் சக்தி’: மௌனப் புரட்சி செய்யுமா பெண் வாக்குகள்?
மக்கள் ஆர்வமும் முக்கிய காரணம்:
வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை குறையும் போது, பதிவான வாக்குகளின் சதவீதம் தானாகவே உயர்கிறது. இதனால் தான் 2021-ல் இருந்த 73% என்பது, தற்போது 85.15% ஆக அதிகரித்துள்ளது. சுருக்கமாகச் சொன்னால், மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தது உண்மை என்றாலும், இந்த 85% சாதனை என்பது பெருமளவு தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சீர்திருத்த நடவடிக்கையினால் விளைந்ததே ஆகும். கடந்த தேர்தலை விட 30 லட்சம் பேர் கூடுதலாக வாக்களித்திருப்பது, ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.