மாநிலம் முழுவதும் மகளிருக்கு இலவச பேருந்து.. அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!!
சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இனிவரும் காலங்களில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களால் புதிதாகக் கொள்முதல் செய்யப்படும் பேருந்துகள் அனைத்தும் குளிர்சாதன வசதி கொண்ட மின்சாரப் பேருந்துகளாக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும், பயணிகள் பணமில்லாப் பரிவர்த்தனை மூலம் எளிதாகப் பயணிக்கும் வகையில் 'ஸ்மார்ட் கார்டு' முறையை முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை, ஜுன் 18: தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் துறை ரீதியான பல்வேறு முக்கிய ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை ரீதியான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சேலம் பார்த்திபன் மற்றும் துறை சார்ந்த அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் மற்றும் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.
மேலும் படிக்க: சென்னையில் நெஞ்சை உலுக்கிய கொடூரம்.. மகளை கொன்று தந்தை தற்கொலை.. மனைவிக்கு லைவ் வீடியோ!
போக்குவரத்துச் சேவைகளின் தற்போதைய நிலை:
தமிழகத்தில் தற்போது செயல்பாட்டில் உள்ள 8 அரசுப் போக்குவரத்து கழகங்கள் வாயிலாக மொத்தம் 21,527 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாளொன்றுக்கு சுமார் 2.5 கோடி பயணிகள் பயணம் செய்கின்றனர் என்பதும், தமிழகத்தின் 98% கிராமங்களுக்கு இந்த பேருந்து சேவை சென்றடைகிறது என்பதும் இக்கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்து:
தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வாக்குறுதியின்படி, தமிழகம் முழுவதும் உள்ள மகளிர் அனைவரும் மாநிலம் முழுவதும் கட்டணமில்லாமல் பேருந்துகளில் பயணிப்பதற்கான புதிய செயல் திட்டம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து முதலமைச்சர் விரிவாக ஆலோசனை நடத்தினார். இத்திட்டத்தை எவ்வித தொய்வுமின்றி, சுமுகமாகச் செயல்படுத்துவதற்கான முறையான திட்டமிடல் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மின் பேருந்துகள் மற்றும் ஸ்மார்ட் கார்டு முறை:
சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இனிவரும் காலங்களில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களால் புதிதாகக் கொள்முதல் செய்யப்படும் பேருந்துகள் அனைத்தும் குளிர்சாதன வசதி கொண்ட மின்சாரப் பேருந்துகளாக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும், பயணிகள் பணமில்லாப் பரிவர்த்தனை மூலம் எளிதாகப் பயணிக்கும் வகையில் ‘ஸ்மார்ட் கார்டு’ முறையை முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேருந்துகளுக்கு தனி வழித்தடம்:
போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பேருந்துகள் விரைவாகச் சென்று சேரும் வகையில், அவற்றுக்கெனத் தனி வழித்தடங்களை ஏற்படுத்தும் ‘பஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம்’ (Bus Rapid Transit System – BRTS) திட்டத்தின் செயலாக்கம் குறித்தும், அதற்கான மேல் நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
தொழிலாளர்கள் நலன்:
இவற்றுடன், போக்குவரத்துத் துறை தொழிலாளர்களின் நலன்கள், அவர்களின் கோரிக்கைகள் மற்றும் நீண்ட நாட்களாக உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
மேலும் படிக்க: திடீரென குறுக்கே வந்த பைக்.. கட்டுப்பாட்டை இழந்த தனியார் பள்ளி வாகனம்.. அடுத்து நேர்ந்த சம்பவம்..!
மாநிலம் முழுவதும் மகளிருக்கான இலவசப் பேருந்து பயணம் மற்றும் அதிநவீன மின்சாரப் பேருந்துகள் அறிமுகம் ஆகிய தொலைநோக்குத் திட்டங்கள் விரைவில் முறைப்படி செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.