இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம்… சென்னையில் தொடர் விமான சேவை பாதிப்பு!
Chennai Flight Services Affected: இஸ்ரே- ஈரான் இடையே போர் பதற்றம் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளதால், சென்னையில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு இயக்கப்படும் பயணிகள் விமான சேவை இன்று 3- ஆவது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளும் மாறி மாறி ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், மத்திய கிழக்கு நாடுகள் தங்களது விமான நிலையத்தை மூடிவிட்டன. இதனால் பல்வேறு நாடுகளுக்கான விமான சேவைகள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் போரின் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் துபாய், பக்ரைன், அபுதாபி, மஸ்கட் ஆகிய நாடுகளுக்கு செல்லும் 28 விமானங்கள் கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 28) ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில், 2- ஆவது நாளாக சென்னை விமான நிலையத்தில் இருந்து மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதில், சென்னை விமான நிலையத்தில் இருந்து சார்ஜா, துபாய், குவைத், அபுதாபி, மஸ்கட், பக்ரைன் ஆகிய நாடுகளுக்கு செல்லும் 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன.
3- ஆவது நாளாக 36 விமானங்கள் ரத்து
இதே போல, மேற்கண்ட நாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வரவேண்டிய 16 பயணிகள் விமானங்களும் என மொத்தம் 33 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், போர் பதற்றம் தற்போதும் நீடித்து வருவதால், இன்று 3-ஆவது நாளாக (திங்கள் கிழமை) மார்ச் 2- ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் இருந்து மஸ்கட், துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நாடுகளுக்கு செல்லக்கூடிய 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுபோல, அந்த நாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வருகை தரக்கூடிய 18 விமானங்கள் என மொத்தம் சுமார் 36 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி மரணத்தை உறுதி செய்த ஈரான் ஊடகங்கள்!




பெரும் சிரமத்தை சந்தித்த விமான பயணிகள்
இதனால், மேற்கண்ட நாடுகளுக்கு தொழில், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக செல்வதற்காக திட்டமிட்டு இருந்த பயணிகள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். தற்போது, ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் உச்ச கட்டத்தை எட்டி உள்ளதால், மீண்டும் விமான நிலையங்கள் திறக்கப்பட்டு எப்போது விமானங்கள் இயக்கப்படும் என்பது குறித்த தகவல் அறிவிக்கப்படவில்லை. மேலும், சென்னை விமான நிலையத்தில் இருந்து, மற்ற விமானங்களில் பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்து இருக்கும் விமான பயணிகள் தங்களது விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு விமானம் குறித்த தகவலை தெரிந்து கொள்ள வேண்டும்.
விமான நிறுவனங்களை தொடர்பு கொள்ளுங்கள்
இதே போல, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்ய இருக்கும் பயன்களும் தங்கள் விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு விமானம் வந்து செல்லக்கூடிய நேரம் உள்ளிட்டவற்றை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு பயணத்தை மாற்றி அமைக்குமாறு விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், விமான சேவை எப்போது சீராகும் என்ற தெளிவான தகவல் தற்போது வரை வெளியாகவில்லை.
மேலும் படிக்க: Khamenei : இறுதி மூச்சு வரை சவால்.. யார் இந்த அலி கமேனி? ஈரான் உச்சதலைவரின் வரலாறு!