திருச்சி: ‘சோறு போடாத மகனை அரிவாளால் வெட்டி கொலை செய்த தந்தை!
Trichy Manaparai Farmer Kills Son: திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த ஆ.கலிங்கப்பட்டியில் 78 வயதான விவசாயி கந்தசாமி, தனது மகன் அண்ணாதுரையை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். கொலைக்கு சொத்துப் பிரச்சனை மற்றும் பராமரிப்பு இல்லாததால் ஏற்பட்ட மன உளைச்சலே காரணமா என போலீசார் விசாரிக்கின்றனர்.

திருச்சி ஜூன் 15: திருச்சி மாவட்டம் மணப்பாறை (Trichy, Manaparai) அருகே, 78 வயதான விவசாயி கந்தசாமி (Farmer Kanthasami) தனது மகன் அண்ணாதுரையை (Murder) அரிவாளால் வெட்டி கொலை செய்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. தன்னை பராமரிக்காமல் விட்டதாகவும், சொத்தை எழுதி கொடுத்தபோதும் உணவளிக்க மறுத்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மகன்கள் இருவரும் தாயை மட்டும் கவனித்ததாகவும், கந்தசாமிக்கு முறையான சாப்பாடும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் மன வேதனையில் இருந்த கந்தசாமி, நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்த மகனை அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளார். சம்பவ இடத்திலேயே அண்ணாதுரை உயிரிழந்த நிலையில் தகவல் அறிந்து வந்த மணப்பாறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மணப்பாறை அருகே பரபரப்பு சம்பவம்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆ.கலிங்கப்பட்டியில் நிகழ்ந்த கொடூரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 78 வயதான விவசாயி கந்தசாமி, தனது சொந்த மகனை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கந்தசாமிக்கு அண்ணாதுரை மற்றும் சின்னச்சாமி – மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். தனது வாழ்க்கை மற்றும் சொத்துக்களை தனது இரு மகன்களுக்கே எழுதி கொடுத்து விட்டிருந்த கந்தசாமி, அதற்குப் பிறகு அவர்களிடமிருந்து எந்தவிதமான பராமரிப்பும் கிடைக்கவில்லை என்று புகார் கூறியுள்ளார்.




சொத்தை பெற்றதும் மகன்கள் தாயை மட்டும் கவனித்த மகன்கள்
சொத்தை பெற்றதும் மகன்கள் தாயை மட்டும் கவனித்துக் கொண்டதாகவும், ஆனால் தந்தையான அவருக்கு உணவு கூட தரப்படவில்லை என தெரிகிறது. மேலும் தான் சேர்த்து வைத்த பணத்தையும் மகன்கள் எடுத்துக் கொண்டதால் வேதனையில் இருந்துள்ளார். மேலும் இதுகுறித்து, அவர் அதிகாரிகளிடம் முறையீடுகள் செய்திருந்தாலும், முடிவில் எந்த தீர்வும் கிடைக்கவில்லை.
இதற்கிடையே, கடந்த வாரம் நடைபெற்ற ஊர்திருவிழாவில் மகன்கள் ஆடு வெட்டி சமைத்து விருந்தில் ஈடுபட்டபோதும், கந்தசாமிக்கு சாப்பாடு தரப்படவில்லை என்பது அவருடைய வேதனையை மேலும் தீவிரமாக்கியதாக கூறப்படுகிறது.
‘சோறு போடாத மகனை அரிவாளால் வெட்டி கொலை செய்த தந்தை!
இந்த மனதளவிலான அழுத்தம் மற்றும் தனிமையால் ஆத்திரமடைந்த கந்தசாமி, 2025 ஜூன் 14 ஆம் தேதி நேற்று நள்ளிரவு தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மூத்த மகன் அண்ணாதுரையை அரிவாளால் தாக்கியுள்ளார். இதில் அண்ணாதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
காவல்துறை வழக்கு பதிந்து விசாரணை
தகவலறிந்த மணப்பாறை காவல்துறையினர், காவல் ஆய்வாளர் சீனிபாபு தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அண்ணாதுரையின் சடலத்தை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பினர். தற்போது கந்தசாமியை கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.