சோபா செட் இல்லை… லாக்கரே வந்தாலும் தேமுதிக முடிவு மாறாது பிரேமலதா ஓபன் டாக்!
DMDK General Secretary Premalatha : சோபா செட் இல்லை.. பீரோ இல்லை... லாக்கரே வந்தாலும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் தனது கொள்கை முடிவில் இருந்து மாறாது என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார் .
கடலூர் மாவட்டம், விருதாச்சலத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுக்கூட்டம் இன்று புதன்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று பேசினார். அப்போது, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த பிறகு, சில கட்சிகள் தங்களது கொள்கைகளை மாற்றி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து விட்டனர். அந்த கட்சிகளுக்கு அழைப்பு வந்தது போல, தேசிய முற்போக்கு திராவிட கழகத்துக்கும், தவெக கூட்டணியில் இணைய சொல்லி அழைப்பு வந்தது. இதனை தற்போதைய தமிழக முதல்- அமைச்சர் ஜோசப் விஜயே அழைத்தார். ஆனால், ஒரு முடிவை நாம் எடுத்து விட்டால் அந்த கொள்கை முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். அதற்கு இதுதான் சான்று ஆகும். சோபா செட் இல்லை. பீரோ இல்லை, லாக்கரே வந்தாலும் தேமுதிக தன் நிலையில் இருந்து மாறாது.
தேமுதிகவின் கொள்கை முடிவு மிக முக்கியம்
ஏனென்றால் நமக்கு கொள்கை முக்கியம் ஆகும். ஒரு கூட்டணியில் இருந்து வெற்றி பெற்றுவிட்டு, சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு கூட்டணியை மாற்றிக் கொள்ளும் நிலைப்பாடு தேமுதிகவுக்கு என்றும் கிடையாது என்று தெரிவித்தார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைத்தது.
மேலும் படிக்க: யானைக்கவுனியில் மரணக் கிணறு.. விஷவாயு தாக்கி தந்தை- மகன் பரிதாப பலி.. சென்னையில் பேரதிர்ச்சி!
தவெகவின் கூட்டணி அழைப்பை நிராகரித்த தேமுதிக
அவ்வாறு இணைந்த கட்சிகளின் தலைவர்களை முதல்- அமைச்சர் ஜோசப் விஜய் பார்க்கச் சென்றார். அப்போது, பிற கட்சிகளின் தலைவர்களுக்கு சோபா செட்டுகள் வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் விமர்சனங்களை தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் தான், தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி அழைப்பை ஏற்க வில்லை என்றும், இதற்காக சோபா செட் உள்ளிட்டவை கொடுத்தாலும் கூட்டணிக்கு செல்ல மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியிலேய தொடருவதாக அறிவித்த பிரேமலதா
இதனிடையே, சட்டமன்ற தேர்தல் நேரத்தில் தேமுதிக- தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால், திமுக கூட்டணியிலேயே, தேமுதிக தொடரும் என பிரேமலதா விஜயகாந்த் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தியேட்டரில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. கையை நீட்டிய இளைஞருக்கு ஈரோடு நீதிமன்றம் சவுக்கடி தீர்ப்பு!