நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள்.. அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு..
Nepal Flood: நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவி தேவைப்பட்டால், அவர்களோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்ப உறுப்பினர்களோ தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் 24 மணி நேர கட்டணமில்லா உதவி எண்களை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 26, 2026: நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால் பல்வேறு பகுதிகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த வெள்ளப்பெருக்கில் சுமார் 400 இந்தியர்கள் சுற்றுலா சென்றிருந்த நிலையில், அவர்களில் 50-க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கித் தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேபாள வெள்ளத்தில் சிக்கிய 49 தமிழர்களின் நிலை என்ன?
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் நேபாள ராணுவம் உள்ளிட்ட மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த 49 பேரின் நிலை குறித்த தகவல்கள் இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், கும்பகோணத்தைச் சேர்ந்த 22 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியவர்களை மீட்கும் நடவடிக்கையில் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
திருவண்ணாமலை, புதுச்சேரி, திருவாரூர், திருச்சி, கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சென்னை குரோம்பேட்டையில் உள்ள சுற்றுலா நிறுவனத்தின் மூலம் நேபாளத்துக்கு சுற்றுலா சென்றதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: நேபாள நாட்டில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கு… 49 தமிழர்களின் நிலை என்ன.. பெரும் பரபரப்பு!
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சுமார் 8 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், 15 யாத்திரிகர்கள் உள்ளிட்ட மொத்தம் 291 வெளிநாட்டினரை காணவில்லை என நேபாள அரசு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல், நேபாளத்தைச் சேர்ந்த 93 பேரும் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு:
இந்நிலையில், நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவி தேவைப்பட்டால், அவர்களோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்ப உறுப்பினர்களோ தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் 24 மணி நேர கட்டணமில்லா உதவி எண்களை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: தமிழ்நாட்டுக்கு விவசாயமும் வேண்டும், விமான நிலையமும் வேண்டும் – அமைச்சர் ராஜ்மோகன்..
தமிழக அரசு உதவி எண்கள்:
- இந்தியாவிற்குள்: 1800 309 3793
- வெளிநாட்டிலிருந்து: +91 80 6900 9900 (மிஸ்டு கால்)
- தொடர்புக்கு: +91 80 6900 9901
- தமிழ்நாடு இல்லம், புதுடெல்லி – கட்டுப்பாட்டு அறை: 9289516712
நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.