விஜயகாந்த் மரணம் குறித்து அவதூறு… சவுக்கு சங்கர் உள்ளிட்ட யூடியூபர்கள் குறித்து தேமுதிக புகார்
DMDK Complaint Case : மறைந்த தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்தின் மரணம் குறித்து அவதூறு பரப்புவதாகவும், அதனால் தொண்டர்கள் மனம் புண்பட்டுள்ளதாகவும் சவுக்கு சங்கர் உட்பட யூடியூபர்கள் மீது அக்கட்சியின் செயலாளர் பார்த்தசாரதி சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். இது அக்கட்சியினரிடேயே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, பிப்ரவரி 6 : மறைந்த தேமுதிக நிறுவனர் தலைவர் விஜயகாந்த்தின் (Vijayakanth) மரணம் தொடர்பாக அவதூறான தகவல்களை பரப்பியதாகக் கூறி, தேமுதிக சார்பில், யூடியூபர்கள் சவுக்கு சங்கர், திருச்சி சூர்யா மற்றும் தமிழா தமிழா பாண்டியன் உள்ளிட்டோர் மீது டிஜிபியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் யூடியூபில் தணிக்கை இல்லாத காரணத்தால் சமூக பொறுப்பு இல்லாமல் சிலர் தவறான, உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பரப்பி வருவதாகவும் அது கடுமைாக கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மறைந்த தேமுதிக நிறுவனர் விஜய்காந்த் மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் (Premalatha Vijayakanth) ஆகியோரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பதிவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேமுகித தலைமை செயலாளர் பி.பார்த்தசாரதி தமிழக டிஜிபி அலுவலகத்தில் அளித்த மனுவில், 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சியின் வளர்ச்சியை தடுக்க சதி நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக 5.76 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைபரர்களைக் கொண்ட அறம் நாடு என்ற யூடியூப் சேனலில் தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அடிப்படை ஆதாரமற்ற தகவல்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தின் சொத்து விவரங்கள் வருமானம் குறித்த தகவல்கள் பகிரப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : சேலத்தில் விஜய் பிரச்சார கூட்டம் நடத்துவதில் சிக்கல்.. தவெகவினர் மனு நிராகரிப்பு




மேலும் விஜயகாந்த்தின் மரணம் தொடர்பாக உணர்ச்சியை தூண்டும் விதமாக தவறான தகவல்களை பார்வையாளர்களை ஈர்க்கும் விதமாக தம்ப்நெயில்களுடன் வெளியிட்டு வருவதாகவும், இதன் மூலம் வருமானம் ஈட்டும் நோக்கில் செயல்படுவதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் ஏற்கனவே பிரேமலதா விஜயகாந்த்தின் சொத்து விவரங்ககளை பரிசீலித்து வரும் நிலையில், இதுபோன்ற வீடியோக்களை வெளியிடுவது அரசு அமைப்புகளை அவமதிக்கும் செயலாகும் என தேமுதிக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : இடைக்கால பட்ஜெட்டில் பொதுமக்கள் எதிர்பார்க்கும் அறிவிப்புகள்…தங்கம் தென்னரசு தகவல்!
இந்த அவதூறு வீடியோக்கள் இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளதாகவும் இதன் காரணமாக தேமுதிக கட்சி தலைமை மீது தவறான கருத்து உருவாகும் சூழ்நிலை இருப்பதாகவும், இதனால் லட்சக்கணக்கான தேமுதிக தொண்டர்கள் மன வேதனையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட யூடியூபர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் யூடியூபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தவறினால், தேமுதிக சார்பில் நீதிமன்றம் செல்லும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அரசியல் அரங்கில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.