Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை.. தமிழக அரசு எச்சரிக்கை

இந்தப் போராட்டக் காலத்தில், தற்செயல் விடுப்பு உட்பட எந்தவிதமான விடுப்புகளும் (மருத்துவ விடுப்பைத் தவிர) வழங்கப்படக்கூடாது. போராட்டத்தில் பங்கேற்கும் தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் பகுதிநேர ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட வேண்டும். மருத்துவ விடுப்பு கோரப்பட்டால், அதன் உண்மைத்தன்மையை மருத்துவ வாரியத்திற்கு அனுப்பி சரிபார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை.. தமிழக அரசு எச்சரிக்கை
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 03 Feb 2026 11:33 AM IST

சென்னை, பிப்ரவரி 3: வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அனைத்துத் துறைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார். அதில், அங்கீகரிக்கப்படாத சில அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இந்த மாதம் 3-ஆம் தேதி முதல் (அதாவது இன்று) காலவரையற்ற வேலைநிறுத்தத்திலும், அதுபோன்ற வேறு சில சங்கங்கள் இந்த மாதம் 10-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்திலும் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன.

இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்… நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரிய மதுரை கலெக்டர் – என்ன நடந்தது?

நடத்தை விதி மீறல்:

எனவே, இந்தச் சூழ்நிலையில், ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். அதன்படி, அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலோ, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அச்சுறுத்தினாலோ, அல்லது அதுபோன்ற போராட்டங்களில் பங்கேற்றாலோ, அது அரசின் அன்றாடப் பணிகளுக்கு இடையூறு விளைவித்தால், அது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளை மீறியதாகக் கருதப்படும்.

ஒழுங்கு நடவடிக்கை:

எனவே, இதுபோன்ற போராட்டங்களில் பங்கேற்று நடத்தை விதிகளை மீறினால், அவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உங்கள் கீழ் பணிபுரியும் அதிகாரிகளுக்கு நீங்கள் அறிவுறுத்த வேண்டும். இந்தப் போராட்டத்தில் பங்கேற்கும் நோக்கத்தில் யாராவது அலுவலகத்திற்கு வராமல் இருந்தால், அந்த நாட்கள் ‘வேலையில்லை, ஊதியமில்லை’ என்ற அடிப்படையில் அங்கீகரிக்கப்படாத விடுப்புகளாகக் கருதப்பட வேண்டும்.

பணியிலிருந்து நீக்கம்:

மேலும் அந்த நாட்களுக்கு ஊதியம் அல்லது படிகள் எதுவும் வழங்கப்படக்கூடாது. அவர்கள் மீது விதி 17-B-இன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்தப் போராட்டக் காலத்தில், தற்செயல் விடுப்பு உட்பட எந்தவிதமான விடுப்புகளும் (மருத்துவ விடுப்பைத் தவிர) வழங்கப்படக்கூடாது. போராட்டத்தில் பங்கேற்கும் தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் பகுதிநேர ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட வேண்டும்.

இதையும் படிக்க : தவெக தேர்தல் பிரசார சட்ட பாதுகாப்பு குழு…34 பேர் கொண்ட டீமை இறக்கிய விஜய்!

எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது:

மருத்துவ விடுப்பு கோரப்பட்டால், அதன் உண்மைத்தன்மையை மருத்துவ வாரியத்திற்கு அனுப்பி சரிபார்க்க வேண்டும். மருத்துவ விடுப்பிற்கான காரணம் செல்லுபடியாகாது என்று கண்டறியப்பட்டால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டத்தால் அரசு சேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். பொதுமக்களும் மாணவர்களும் பாதிக்கப்படக்கூடாது. போராட்டம் முடியும் வரை ஊழியர்களின் வருகை கண்காணிக்கப்பட வேண்டும். வருகைப் பதிவு விவரங்கள் தினமும் காலை 10:15 மணிக்குள் அரசுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.