தொகுதி மறுவரையறை மசோதா.. முதல்வர் விஜய் தலைமையிலான எம்.பிக்கள் கூட்டத்தை புறக்கணிக்க அதிமுக திமுக முடிவு..
முதலமைச்சர் விஜய் தலைமையிலான எம்.பி.க்கள் கூட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சிகளாக உள்ள திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த எம்.பி.க்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக மற்றும் அதிமுக எம்.பி.க்களும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார்.
ஆகஸ்ட் 8, 2026: தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தை திமுக மற்றும் அதிமுக புறக்கணிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாவை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி நிறைவேற்ற மத்திய அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் தென் மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும் என்ற அச்சம் நிலவி வருகிறது.
தொகுதி மறுவரையறை மசோதா:
இதுதொடர்பாக மத்திய அரசு அளித்துள்ள விளக்கத்தில், தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை சுமார் 50 இடங்கள் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், வடமாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் அதிகரிக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும் என அரசியல் கட்சிகள் தெரிவித்து வருகின்றன.
மேலும் படிக்க: பழனி கோவில் நில மோசடி வழக்கு.. சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் திடீர் உயிரிழப்பு.. மதுரையில் பரபரப்பு!
மேலும், தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் பட்சத்தில், நாடாளுமன்றத்தில் முக்கியத் தீர்மானங்கள் அல்லது மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும்போது தமிழகத்தின் பிரதிநிதித்துவமும், அதிகாரமும் குறையும் என அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆலோசனை கூட்டம்:
இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசித்து உரிய முடிவெடுப்பதற்காக தமிழக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழகத்தில் உள்ள மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் சாய் குமார் தனித்தனியாகக் கடிதம் அனுப்பியிருந்தார்.
கூட்டத்தை புறக்கணிக்கும் அதிமுக திமுக:
முதலமைச்சர் விஜய் தலைமையிலான எம்.பி.க்கள் கூட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சிகளாக உள்ள திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த எம்.பி.க்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக மற்றும் அதிமுக எம்.பி.க்களும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார்.
மேலும் படிக்க: சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இலவச வைஃபை.. சென்னை மாநகராட்சி எடுத்த முடிவு..
இந்த நிலையில், தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் எம்.பி.க்கள் கூட்டத்தை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. அதிமுகவைச் சேர்ந்த எம்.பி.க்களான தம்பிதுரை, தனபால், தர்மர் உள்ளிட்ட நான்கு பேர் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழக வெற்றிக் கழக அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் திமுக பங்கேற்காது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், மாநிலங்களவை எம்.பி.யும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் மற்றும் தேமுதிகவைச் சேர்ந்த எம்.பி. சுதீஷ் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.