பிரியாணியில் இறந்த பூரான்.. மன உளைச்சலுக்கு ஆளான குடும்பம்.. உணவகத்திற்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
இந்த வழக்கை நுகர்வோர் ஆணைய தலைவர் தி. கோபிநாத் மற்றும் உறுப்பினர்கள் கவிதா கண்ணன், டி.ஆர். சிவக்குமார் ஆகியோர் விசாரித்தனர். விசாரணையின் போது, வாடிக்கையாளர் அளித்த புகாருக்கு உணவக நிர்வாகம் உரிய பதில் அளிக்காதது சேவை குறைபாடாகும் என ஆணையம் கருத்து தெரிவித்தது.
ஜூன் 11, 2026: சென்னை எருக்கஞ்சேரியை சேர்ந்த அகமது சித்திக் என்பவருக்கு 45 வயதாகிறது. இவரது திருமணம் கடந்த ஆண்டு நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு டிசம்பர் 28ஆம் தேதி மறு வீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மனைவியின் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது உறவினர்களுக்கு விருந்து அளிக்கும் நோக்கில், பெரம்பூரில் செயல்பட்டு வரும் எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணி கடையில் இருந்து சுமார் ரூ.3,500 மதிப்பிலான ஒரு பக்கெட் மட்டன் பிரியாணியை வாங்கியுள்ளார்.
மட்டன் பிரியாணியில் பூரான்:
பின்னர் குடும்பத்தினருடன் சேர்ந்து பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அதில் இறந்த நிலையில் பூரான் இருந்ததாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
திருமண விழாவின் மகிழ்ச்சியான சூழல் ஒருசேர பதற்றமாக மாறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவம் குறித்து உடனடியாக பிரியாணி கடை நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் கடை தரப்பில் எந்தவிதமான உரிய பதிலும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்:
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அகமது சித்திக், சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “திருமணத்திற்குப் பிறகு நடைபெற்ற முக்கிய குடும்ப நிகழ்ச்சியில் இவ்வாறான சம்பவம் நடைபெற்றதால் உறவினர்கள் முன்னிலையில் மிகுந்த அவமானத்திற்கும் மன வேதனைக்கும் ஆளாக நேரிட்டது. குடும்பத்தினரால் அந்த நிகழ்வை மகிழ்ச்சியாக கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. எனவே சம்பந்தப்பட்ட உணவகம் மீது நடவடிக்கை எடுத்து உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை விடுத்திருந்தார்.
மேலும் படிக்க: “21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்கக்கூடாது”.. மனமகிழ் மன்றம், மதுபார்களுக்கு அரசு கட்டுப்பாடு!!
இந்த வழக்கை நுகர்வோர் ஆணைய தலைவர் தி. கோபிநாத் மற்றும் உறுப்பினர்கள் கவிதா கண்ணன், டி.ஆர். சிவக்குமார் ஆகியோர் விசாரித்தனர். விசாரணையின் போது, வாடிக்கையாளர் அளித்த புகாருக்கு உணவக நிர்வாகம் உரிய பதில் அளிக்காதது சேவை குறைபாடாகும் என ஆணையம் கருத்து தெரிவித்தது.
மேலும் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகளை கடைப்பிடிப்பது உணவகங்களின் அடிப்படை பொறுப்பு என்றும், உணவில் இதுபோன்ற அசுத்தங்கள் இருப்பது பொதுமக்களின் உடல்நலத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும் ஆணையம் தெரிவித்தது.
ஒரு லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு:
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட அகமது சித்திக்கிற்கு ரூ.1 லட்சம் இழப்பீடும், வழக்கு செலவுக்காக கூடுதலாக ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட பிரியாணி கடைக்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.
தொடர்ந்து வெளியில் விற்கப்படும் உணவுப் பொருட்களில் புழுக்கள் நெளிவது, கரப்பான் பூச்சி இருப்பது, பூரான் இறந்து கிடப்பது, எலி மற்றும் பல்லி போன்றவை காணப்படுவது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் வெளி உணவுகள் மீதான நம்பிக்கையை குறைப்பதோடு, ஹோட்டல்களில் உணவு வாங்கி சாப்பிடுவதற்கே அச்சத்தை ஏற்படுத்தி வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.