“21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்கக்கூடாது”.. மனமகிழ் மன்றம், மதுபார்களுக்கு அரசு கட்டுப்பாடு!!
21 வயதுக்குக் குறைவான நபர்கள் எவருக்கும் எக்காரணம் கொண்டும் மதுபானம் விற்கப்படவோ, வழங்கப்படவோ, விநியோகிக்கப்படவோ அல்லது பரிமாறப்படவோ கூடாது. பார்களுக்கு வரும் நபர்களின் வயது குறித்து ஏதேனும் சந்தேகம் எழுந்தால், அவர்களுக்கு மதுபானம் வழங்குவதற்கு முன்பாக, அவர்களின் வயதுக்கான தகுந்த செல்லுபடியாகும் ஆவணச் சான்றுகளை ஊழியர்கள் கட்டாயம் சரிபார்க்க வேண்டும்.
சென்னை, ஜுன் 11: தமிழகம் முழுவதும் போதைப்பொருள் இல்லாத, ஆரோக்கியமான மற்றும் சமூகப் பொறுப்புணர்வு மிக்க சூழலை உருவாக்கும் நோக்கில், தமிழக அரசு மது பார்கள் மற்றும் மனமகிழ் மன்றங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு மதுபான விதிகளின் கீழ் உரிமம் பெற்ற அனைத்து நட்சத்திர ஓட்டல் பார்கள், தங்கும் விடுதிகள் மற்றும் மனமகிழ் மன்றங்கள் (FL-2 மற்றும் FL-3 வளாகங்கள்) இந்த புதிய விதிகளை உடனடியாகவும் கட்டாயமாகவும் நடைமுறைப்படுத்த வேண்டும் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க: பெண்கள் மீது கை வைத்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை… முதல்வர் விஜய் விடுத்த கடும் எச்சரிக்கை!
கட்டுப்பாடுகளின் முக்கிய விவரங்கள்:
21 வயதுக்குக் குறைவான நபர்கள் எவருக்கும் எக்காரணம் கொண்டும் மதுபானம் விற்கப்படவோ, வழங்கப்படவோ, விநியோகிக்கப்படவோ அல்லது பரிமாறப்படவோ கூடாது. பார்களுக்கு வரும் நபர்களின் வயது குறித்து ஏதேனும் சந்தேகம் எழுந்தால், அவர்களுக்கு மதுபானம் வழங்குவதற்கு முன்பாக, அவர்களின் வயதுக்கான தகுந்த செல்லுபடியாகும் ஆவணச் சான்றுகளை ஊழியர்கள் கட்டாயம் சரிபார்க்க வேண்டும்.
உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி:
FL-2 உரிமம் பெற்ற அனைத்து மனமகிழ் மன்றங்களும் தங்களது பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்குக் கட்டாயம் உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்க வேண்டும். நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி, பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் அவர்களது தகுதியுடைய விருந்தினர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கப்பட வேண்டும். உறுப்பினர் அல்லாத வெளிநபர்களுக்கு அனுமதி இல்லை.
செயல்பாட்டு நேரமும் பிற விதிகளும்:
FL-2 மற்றும் FL-3 பார்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள செயல்பாட்டு நேரங்கள் எந்தவித விலகலும் இன்றி கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும். கிளப்புகளில் பார் செயல்பாடு என்பது அனுமதிக்கப்பட்ட பல நடவடிக்கைகளில் ஒன்றாக மட்டுமே இருக்க வேண்டும். கிளப் நிர்வாகங்கள் மது விற்பனைக்கு மட்டுமே முக்கியத்துவம் தராமல், கிளப் தொடங்கப்பட்ட நோக்கத்தின்படி பிற பொழுதுபோக்கு, கலாசாரம், விளையாட்டு மற்றும் சமூகச் செயல்பாடுகளைத் தொடர்ந்து பயனுள்ள முறையில் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் படிக்க: சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படையில் 2500 புதிய பணியிடங்கள்.. முதல்வர் விஜய் அறிவிப்பு!
மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை:
இந்த அறிவுறுத்தல்களைத் தமிழகத்தில் உள்ள அனைத்து உரிமதாரர்களும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் மற்றும் உரிம நிபந்தனைகளை மீறிச் செயல்படும் பார்கள் மீது சட்டம் பாயும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், அவை மிகவும் தீவிரமான குற்றமாகக் கருதப்பட்டு, சம்பந்தப்பட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் உரிமம் ரத்து உள்ளிட்ட கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை எச்சரித்துள்ளது.